Thursday, January 12, 2012

வாழும் மண்ணை மறந்த ஆங்கில ஊடக மலையாளப் பத்திரிக்கையாளர்கள்

”காக்கைச் சிறகினிலே” ஆசிரியர் குழு கூட்டத்தில் வைகறை அய்யா, ராதிகா கிரி அவர்களின் இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலத்தைக் கொடுத்து தமிழில் பெயர்த்து தரச் சொன்னார். முடிந்த அளவு முயன்றிருக்கிறேன்

முல்லைப் பெரியாறு அணை குறித்துப் பல்வேறு ஆங்கில செய்தித் தாள்களில் வெளிவரும் செய்திகளைக் கூர்ந்து கவனிக்கும் போது கேரள பத்திரிக்கையாளர்களின் தொழில் நேர்மை குறித்து ஆழமான அய்யங்கள் என்னுள் எழுகின்றன.

தங்களது அரசாங்கத்தின் நிலைப் பாடுகளையும், தங்கள் மக்களது உணர்வுகளையும், அதிலிருக்கும் உண்மைகளைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாது, அப்படியே மலையாளப் பத்திரிக்கைகளில் எழுதிவிடும் பத்திரிக்கையாளர்கள் ஒருபுறம். அதைக்கூட கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடலாம். ஆனால், ஆங்கில ஊடகங்களில் , அதுவும், சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகங்களில் பணிபுரியும் மலையாளப் பத்திரிக்கையாளர்களும் அதையே செய்வதுதான் நாம் அதுகுறித்து கவனம் குவிக்கவும், கவலையோடு அக்கறை கொள்ளவும் காரணமாயிருக்கிறது.

“முல்லைப் பெரியாறா? முல்லப் பெரியாறா?|”

இந்தக் கேள்விக்கான உங்களது பதிலே நீங்கள் தமிழகத்து ஆதரவாளரா? இல்லை கேரள ஆதரவாளரா என்பதைச் சொல்லிவிடும்.

“ ஒருக்கால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஏதேனும் சேதாரம் ஏற்பட்டாலோ அல்லது அணையே முற்றாக உடைந்தாலோ அணையிலிருந்து வெளியாகும் நீர் முழுவதும் இடுக்கி மற்றும் அதன் கீழுள்ள அணைகளில் சேதாரமில்லாமல் சேகரிக்கப் பட்டு விடும்” என்று நீதிமன்றத்தில் சொன்னமைக்காக கேரள அட்வகேட் ஜெனரல் திரு. K.Pதண்டபாணி அவர்கள் பதவி இறக்கம் செய்யப் பட்ட செய்தியை வெளியிடுவதில் இவர்கள் நடந்து கொண்ட விதமே வழுக்கிக் கொண்டே சறுக்கும் இவர்களது பத்திரிக்கை தர்மத்திற்கான சமீபத்திய சான்றாகும்.

அவர் பதவி இறக்கம் செய்யப் பட்ட நாளிலோ அல்லது அதற்கு அடுத்த நாளிலோ அந்தச் செய்தியைச் சென்னை ஆங்கிலப் பத்திரிக்கைகள் எதுவும் வெளியிடவில்லை. மிகவும் விபரீதமான,  முட்டாள்த் தனமான கருத்தினை சொல்லியிருக்கிறார் என்று தண்டபாணிக்கு எதிராக கேரள மக்கள் கொந்தளித்து வீதிக்கு வந்த பின்னரே வேறு வழியே இல்லாமல் அவை அந்தச் செய்தியை வெளியிட்டன. அதுவும் கூட அதற்காக தண்டபாணி பெற்ற தண்டனையைச் சொல்லாமல் அல்லது சொல்ல வேண்டிய அளவுக்குச் சொல்லாமல், அவரது கருத்து ஏற்படுத்திய முரண்பாடுகளை மட்டுமே மிகுந்த எச்சரிக்கையோடு வெளியிட்டன.

 தண்டபாணியின் கருத்தினை அவர்கள் ஏற்கிறார்களா? இல்லையா என்பது வேறு. இதில் நான் கவனப் படுத்த விரும்புவது என்னவெனில் கேரள அட்வகேட் ஜெனரலின் கருத்தினை பிரசுரிப்பதற்கு தகுதி வாய்ந்ததாகவே அவர்கள் எவரும் கருதவில்லை என்பதைத்தான்.

முதலில் தங்களை மலையாளிகளாகவும், பிறகே தேவைப் படும் பட்சத்தில் தங்களைப் பத்திரிக்கையாளர்களாகவும் மலையாளப் பத்திரிக்கையாளர்கள் கருதுகிறார்கள் என்றும் இதைக் கொள்ளலாம்.

" தி டைம்ஸ் ஆஃப் இந்தியா” பத்திரிக்கையின் சென்னைப் பதிப்பில் நவம்பர் 24 அன்று வெளியான ‘டைம்ஸ் வியூ’ தான் கடந்த இரண்டு வாரங்களாக என்ன நடக்கிறது என்று என்னைக் கூர்ந்து கவனிக்கப் பணித்தது.

“டேம் 999” திரைப் படத்தை இருட்டடிப்பு செய்ய வலியுறுத்தும் போராட்டங்களுக்கு வளைந்து பணிந்த தமிழகத் திரையரங்குகள்” என்ற தலைப்பின் கீழ் வெளியாகி உள்ள கருத்துச் சிதறலின் முதலிரண்டு வரிகளும் எந்த வித வில்லங்கச் சாயமும் பூசிக் கொள்ளாமல் கருத்துக்களைக் கூறும் தங்களது சுதந்தரத்திற்கான உரிமையை மட்டுமே கோருகின்றன. மூன்றாவது வரிதான் வில்லங்கப் பெருவெடியாய் வந்து விழுகிறது.  அது இவ்வாறு சொல்கிறது, “ உணர்ச்சிக் கொந்தளிப்பான முல்லப் பெரியாறு அணை விஷயத்தினை தெற்கு மாவட்டங்களில் வாழும் மக்களின் ஆதங்கத்தையும் ஆதரவையும் பெற வேண்டி அரசியல் கட்சிகள் தவறாகவும் திரிக்கவுமே செய்கின்றன.

"முல்லப் பெரியாறு” என்று மலையாளத்தில் எழுதவும் உச்சரிக்கவும் படுகிற, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வும் அவ்வாறே எழுதத் தேர்ந்தெடுத்து எழுதுகிற ‘முல்லைப் பெரியாறு’ கேரளாவில்தான் உணர்ச்சிக் கொந்தளிப்பான ஒரு விஷயமே தவிர தமிழகத்தில் அல்ல. ஆனால் கேரள அரசாங்கமும், பத்திரிக்கையாளர்களும், மக்களும் கூட்டாய் ஒன்றிணைந்து திட்டமிட்டுத் தவறான செய்திகளை இங்கே பரப்புவதன் மூலம் உணர்ச்சிக் கொந்தளிப்பான கலவர பூமியாக தமிழகத்தை மாற்றி விடுவார்களோ என்ற அச்சமும் கவலையும் நமக்குண்டு.

சென்னை மண்ணிலேயே வாழும் பத்திரிக்கையாளராயினும் ‘டைம்ஸின் கருத்து’ என்பது ஒரு மலையாளியின் கருத்தே என்பதில் சன்னமாகவேனும் யாரும் கவலை கொள்ளத் தேவை இல்லை.

சென்னையிலுள்ள ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ அலுவலகத்தின் ஊழியர் கட்டமைப்பு பற்றி ஊடகத் துறையில் ஓரளவுக்கும் கொஞ்சம் குறைவான அளவு ஞானம் உள்ளவர்களுக்கும் நன்கு புரியும். ஒரு நாயரோ, மேனனோ அல்லது ஏதாவது ஒரு மலையாள இனத்தவரோதான் அதன் முக்கியப் பொருப்புகளில் உள்ளனர். அதன் உள்ளூர், அரசியல், மற்றும் பெருநகர ஆசிரியர்களாகவும் மலையாளிகளே உள்ளனர்.

”டைம்ஸ் அஃப் இந்தியா” நாளிதழின் சென்னை அலுவலகம் ஒரு ஆங்கில ஊடகத்தின் அலுவலகமாயினும் ஒருவருக்கொருவர் மலையாளத்தில் மட்டுமே பேசிக்கொள்ளும் ஊழியர்களாலும், மலையாள கலாச்சார மணத்தாலுமே நிரம்பிக் கசிகிறதென்று அதன் முன்னால் ஊழியர் ஒருவர் கூறுகிறார்.

"டைம்ஸ் ஆஃப் இந்தியா” வில் சொற்ப சிறுபான்மையினராகவே தமிழர்கள் இப்போது உள்ளனர் என்றும் தான் அங்கு பணியாற்றிய போது தானும் தனது சக ஊழியர் ஒருவரும் தமிழகத்தைப் பாதிக்கும், அல்லது தமிழகம் சார்ந்த செய்திகள் நிராகரிக்கப் படுவது அல்லது இரண்டாம் பட்சமாக்கப் படுவது குறித்து அவ்வப்போதுவிவாதிப்போம் என்றும் அதன் இன்னொரு முன்னாள் ஊழியர் சொல்கிறார்.

ஓணம் பண்டிகையின் போது அலுவலகத்தை அலங்கரித்துக் கொண்டாட அனுமதிக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நிர்வாகம் அதே அனுமதியைத் தமிழ்ப் புத்தாண்டின் போது வழங்க மறுப்பது அங்குள்ள தமிழர்களை எரிச்சல்பட வைத்ததென்றும் அவரும் சிலர்ம் இது குறித்து நியாயம் கேட்டதாகவும் ஆனால் எதுவும் விளைந்துவிட வில்லை என்றும் அவர் கூறுகிறார்.

படித்த மேல் தட்டு மக்களின் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடக்கும் ஆங்கில ஊடகங்கள் அடித்தட்டு மற்றும் உழைக்கும் தமிழ் மக்களின் கலாச்சாரத்தினை உதாசீனப் படுத்தி நிராகரிப்பதன் விளைவாக ஆங்கில மற்றும் தமிழ்ச் செய்தித் தாள்கள் ஒரே செய்தியை ஒன்றுக்கொன்று முற்றாய் முரண்பட்டுச் சொல்கின்றன என்று டைம்ஸ் இந்தியாவினை வாசிப்பதைத் தவிர அதனோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளாத ஒரு மூத்தப் பத்திரிக்கையாளர் சொல்கிறார்.

மிகச் சாதாரன பின்புலத்திலிருப்பவர்களும் ஆங்கிலச் செய்தியறைகளில் இடம் பிடிக்க முடிந்த போதிலும் அடித் தட்டு மக்களின் குரல் தொடர்ந்து உதாசீனப் படுத்தப் பட்டே வருகிறது. தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த பார்வை என்பது மேட்டுக்குடிகளின் பார்வையாகவே உள்ளதால் அதிகப் படியான தவறான எண்ணங்களும் கற்பிதங்களும் உருவாகி உள்ளன.

ஒரு உதாரணத்தோடு சொன்னால் இது இன்னும் விளங்கும்.டெல்லி, கொல்கொத்தா மற்றும் மும்பை மக்களை இட்லி தோசை மற்றும் சாம்பார் ஆகியவையே தமிழ் சமையலறைகளின் விளை பொருட்களாக நம்ப வைத்துள்ளன ஆங்கில ஊடகங்கள். பெரும்பான்மை தமிழ் மக்கள் அசைவர்களாக இருக்கும் உண்மையை மறைத்து இட்லி தோசை சாம்பாரே தமிழ் மண்ணின் பாரம்பரிய உணவு என்பதானதொரு பிம்பத்தை ஆங்கில ஊடகங்கள் ஏற்படுத்தி உள்ளன.

வெறும் பத்து சத தமிழ் மக்கள் மட்டுமே புரிந்து ரசிக்கும் பரத நாட்டியம், மற்றும் கர்நாடக இசை ஆகியவற்றை ஏதோ ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பாரம்பரியக் கலைகளாக ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துக் காப்பாற்றி வருகின்றன. எனில், பெரும்பான்மையான தொண்ணூறு சத தமிழ் மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடனக் கலைகள் என்னவாயின?

வேறு மாநிலங்களிலிருந்து வந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள், குறிப்பாக ஆசிரியர் குழுவின் உச்ச நிலைகளில் உள்ளவர்கள் கற்றறிந்த மேட்டுக் குடியினரோடு மட்டுமே தங்களை அடையாளப் படுத்திப் பொருத்திக் கொள்வதால் பெரும்பான்மைத் தமிழர்களான அடித் தட்டு மற்றும் உழைக்கும் மக்களின் இசையும் கலைகளும் ஆங்கில ஊடகங்களின் அங்கீகாரத்தைப் பெற இயலாமலே போயின.

இடுக்கி அணைக்கான நீரே கேரள அரசின் பிரதான நோக்கம். முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அல்லது உடைக்கப் பட்டால் மட்டுமே இது சாத்தியம் என்று கருதுவதால் கேரள அரசுதான் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்கிற பிரச்சாரத்தை மலையாளப் பத்திரிக்கைகளின் மூலமாகத் தொடங்கியது.

காலப் போக்கில் கேரள அரசின் கருத்தினை ஊதி ஊதிப் பெரிய வண்ண பலூனாக யார் மாற்றுவது என்று மலையாளப் பத்திரிக்கைகள் தங்களுக்குள் ஒரு பந்தயத்தைத் தொடங்கிய புள்ளியில்தான் இந்தப் பிரச்சினையில் உணர்ச்சிக் கொந்தளிப்பும் வெப்பமும் பெருமளவு கூடிப் போயின. எந்தவிதமான விஞ்ஞான ஆதாரமும் இல்லாத போதும் முல்லைப் பெரியாறு அணை என்பது ஒரு நீர்க் குண்டு என்பதாகவும் அது எந்த நொடியும் இடிந்து விடுமென்றும் ஒவ்வொரு மலையாளியும் சில பத்து ஆண்டுகளாக நம்ப வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மலையாளப் பத்திரிக்கையாளரும் இதே உணர்வலை வரிசையில் தன்னைப் பொருத்திக் கொள்கிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஆங்கில ஊடகங்கள் பெரும்பாலும் மலையாள பத்திரிக்கையாளர்களாலேயே நிரம்பி வழிவதால் வேறு வழியே இன்றி அவை கேரளத்தின் கருத்துக்களையே வெளியிடுகின்றன.

தமிழகத்தின் முதல்வராக பிறப்பால் மலையாளியாக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களும் தலைமைச் செயலாளராக ஒரு மலையாளியும் இருந்த காலத்தில் ஒரு நாளில்தான் 152 அடியிலிருந்து 136 அடியாக அணையின் கொள்ளளாவு குறைக்கப் பட்டது.

மலையாளத்து அலைவரிசையோடு தன்னை முற்றாய்ப் பொருத்திக் கொண்டுள்ள ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ மட்டுமல்ல ‘இந்து’ பத்திரிக்கையின் சென்னை பதிப்பும் ‘முல்லப் பெரியாறு’ என்றுதான் எழுதுகிறது.

மக்களைக் கொந்தளிக்கச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் கேரள அரசின் நோக்கத்தையே எதிரொலிக்கும் ஊதுகுழல்களாகவே மலையாளப் பத்திரிக்கையாளர்கள் செயல்படத் தொடங்கும் போதுதான் பத்திரிக்கைத் துறையின் சாராத் தன்மையும் நம்பகத் தன்மையும் காயம் படுகின்றன.

அணை உடைந்துவிடும் என்று ஊதிப்பெருக்கப் பட்ட பொய்யின் வரலாறும் கொஞ்சம் நீண்டதுதான்.

அன்று மலையாளப் பத்திரிக்கை உலகின் உச்சானிக் கொம்பில் இருந்தவரும், அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனைகளையும் அறிவுறைகளையும் வழங்குமளவிற்கு அவர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தவருமான, திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ‘மலையாள மனோரமா’ வின் அன்றையத் தலைவர் திரு. பட்ரோஸ் சும்மாரிடமிருந்து தொடங்குவதாக, 1978 இல் தொடங்கிய இந்த விவகாரத்தின் அந்தரங்கங்களை அறிந்த மூத்த சென்னைப் பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகிறார்.

1976 முதல் நான்கு பருவங்களாக இடுக்கி அணைக்கு போதுமான நீர் வரத்து இல்லாமல் போனது ஏன் என்றும் அதற்கு என்ன செய்யலாம் என்றும் இன்றைய கேரள அரசின் ஆலோசகரும் அன்றைய கேரள மின்சாரத் துறையின் தலைமைப் பொறியாளருமான M.K.பரமேஷ்வரன் நாயரும் அன்றைய காங்கிரசின் தலைவர் கருணாகரனும் கவலையோடு கலந்தாலோசித்ததின் விளைவாக 1978 இல் ‘ முல்லப் பெரியாறு அணை’ உடையப் போகிறது என்று மலையாள மனோரமா எழுதி இந்தப் பொய்ப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைக்கிறது.

அணையின் கொள்ளளவைக் குறைத்துக் கொள்ள தமிழக முதல்வரும் தங்களது ரத்த சகோதரருமான எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களிடம் பேசுமாறு கருணாகரன் அவர்களிடம் வேடிக்கையாகப் பேச்சைத் துவக்கிய பரமேஷ்வரன் நாயர் தனது தொனியை மாற்றிக் கொண்டு அதற்குமுன் மக்களிடம் அணை குறித்த அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்திவிட்டு அதன் பிறகு கோரிக்கையை வைக்க வேண்டுமென்றாராம்.

மலையாள மனோரமா துவக்கி வைத்த அச்சம் கொள்ள வைக்கும் கயமையைப் புனித வேள்வி போல் ஒவ்வொரு மலையாளப் பத்திரிக்கையாளரும் தொடர்ந்து தோளேற்றிச் செயல் படுகிறார்கள். இவர்களது இந்த நீண்ட பொய்ப் பிரச்சார யாத்திரையை உச்ச நீதிமன்றம்
‘ அணை பலவீனமாக இல்லை. எனவே தமிழக அரசு கொள்ளளவைக் கூட்டிக் கொள்ளலாம்’ என்று 2006 பிப்ருவரியில் ஒரு தீர்ப்பு சொல்லி முடித்து வைத்தது.

இன்று ஒவ்வொரு மலையாளப் பத்திரிக்கையாளரும் பட்ரோஸ் சும்மராக செயல் படுவது பத்திரிக்கை உலகை மட்டுமல்ல, நீதியை, உண்மையை முடமாக்கிப் போடும் துயரை உற்பத்துக்கும் செயலாகும். இதை உணர்ந்துகொள்ளாத பசத்தில் அவர்களது குறுகிய இனப் பற்று இந்த தேசத்தின் மேன்மையான பன்முகத் தன்மையை உடைத்துப் போடும்.

கொஞ்சம் தண்ணீருக்காகவும் திருவாங்கூர் மகாராஜாவிடமிருந்து சட்டப்படி பிரிட்டிஷ் இந்திய அரசு கையகப் படுத்திய ஒரு சின்னத் துண்டு நிலத்திற்காகவும் தங்களது பத்திரிக்கை தர்மத்தை கேரள பத்திரிக்கையாளர்கள் காவு கொடுக்கலாமா?


 நன்றி: “காக்கைச் சிறகினிலே”

10 comments:

  1. // இட்லி, தோசை சாம்பாரே தமிழ் மண்ணின் பாரம்பரிய உணவு என்பதானதொரு பிம்பத்தை ஆங்கில ஊடகங்கள் ஏற்படுத்தி உள்ளன. //
    இது குறித்து தான் ஆய்வுகளை ஏற்படுத்த வேண்டுமென தோழர்களை வலியுறுத்தி வந்தேன் . நெத்தியடி வரிகள் ...

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  3. அருமை நண்பர் எட்வின் அவர்களே! இலங்கைக்கும்,இந்தியாவிற்கும் இடையே உள்ள கடற்கரையில் இந்தியப் பகுதியில் நீர்வளம் அதிகம்.இலங்கைப்பகுதியில் மீன் வளம் அதிகம். பேராசை கொண்ட இயந்திரப் படகு உரிமையாளர்கள் மீனவர்களை கட்டாயப்படுத்தி இலங்கைப்பகுதியில் மீன் பிடிக்க வெண்டுமென்றே அனுப்புகிறார்கள். இதனை எந்தப்பத்திரிகையும் எழுதாது. பதிவர் "அடர்கருப்பு "மட்டுமே எழுதியிருந்தார். நீர் வளத்தை கேரள மக்களூக்குக் கொடுத்த இயற்கை நிலவளத்தை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. மீனும் சரி , நீரும் சரி பரஸ்பரம் விட்டுக்கொடுத்து, பேசித்தீர்த்துக்கோள்ளவேண்டிய ஒன்றாகும். உங்கள் பதிவு அதற்கு உதவிகரமாக இல்லையே என்ற ஆதங்கம் எனக்கு உள்ளது அன்புடன்---காஸ்யபன்

    ReplyDelete
  4. சரியா சொன்னீங்க... பார்ப்பன ரசனைதான் தமிழனின் ரசனை என பரப்பப்பட்டு வருகிறது...

    ReplyDelete
  5. லட்சக்கணக்கான உயிர் இழப்புகளுக்குப் பிறகு... கணக்கிலடங்கா துண்பங்களையும் வேதனைகளையும் கடந்து... பல்வேறு பிரச்சினைகளை முடிந்து இங்கிலாந்து நாட்டுக்காரண் கட்டி இந்தியா எனும் கோட்டை... ஒவ்வொரு செங்கற்கற்களாய் பிடுங்கப்பட்டுக் கொண்டு இருப்பதை சுதந்திரம் வாங்கித் தந்ததாக மார் தட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கை கட்டி பார்த்துக்கொண்டு இருப்பதை விட கேவலம் வேறு இல்லை! அமெரிக்கா மிகப்பெரிய உள்நாட்டுப் போருக்குப் பிறகுதான் பிறந்தது. தென் பகுதி அமெரிக்கர்களுக்கும் வடபகுதி அமெரிக்கர்களுக்குமான கடுமையான போருக்குப் பிறகுதான் அவை ஒன்றினைக்கபட்டன.. ஆனால் அதற்க்குப் பிறகு இன்று வரை ஒவ்வொருவனும் தான் அமெரிக்கன் என்பதை பெருமிதத்துடன் கூறுகின்றான்.(அமெரிக்கா வரலாற்றைப் படிக்கவும்)

    ஆனால் சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் நிலை என்ன... தடைசெய்யப்பட்ட சீக்கிய இயக்கங்கள், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கங்கள், தடை செய்யப்பட்ட தெலுங்கான இயக்கங்கங்கள், தடை செய்யப்பட்ட தமிழ் இயக்கங்கள்... மாநிலங்களுக்குள் ஒற்றுமையின்மை... கேவலமான அரசியல் லாபங்களுக்காக கூறப்படும் பொய் பிரச்சாரங்கள்... அவற்றை கைகட்டி பார்க்கும் மத்திய அரசாங்கம்..! ஸ்டாலின் ஆட்சிக்குப்பிறகு சுக்கு நூறாய் உடைந்து போன ரஷ்யாவைப் போல்... காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு இங்கு நடந்தாலும் வியப்பில்லை...!

    ReplyDelete
  6. நான் தமிழன். நீ மலையாளி. என்ற உணா்வு மட்டும் தான் நம்மிடம் இருக்கிறது. கூடங்குளம் ஆபத்து என்கிறன் தமிழன். முல்லை பெரியார் அணை ஆபத்து என்கிறான் மலையாளி. எங்கே இருக்கிறான் இந்தியன்.

    ReplyDelete
  7. அழகாய் மொழிபெயர்த்துப் பதிந்ததற்கு நன்றி ஐயா.

    பத்திரிக்கை தர்மம் என்பது மேற்சொன்ன பத்திரிக்கைகளில் இன்று சுத்தமாக இல்லாமலே போய்விட்டது என்பது வருந்தத்தக்கது.

    //மிகச் சாதாரன பின்புலத்திலிருப்பவர்களும் ஆங்கிலச் செய்தியறைகளில் இடம் பிடிக்க முடிந்த போதிலும் அடித் தட்டு மக்களின் குரல் தொடர்ந்து உதாசீனப் படுத்தப் பட்டே வருகிறது. தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த பார்வை என்பது மேட்டுக்குடிகளின் பார்வையாகவே உள்ளதால் அதிகப் படியான தவறான எண்ணங்களும் கற்பிதங்களும் உருவாகி உள்ளன.//

    நல்ல தொடர்ச்சியான வாசிப்பனுபவமும் அதைத் தொடர்ந்த நல்ல சிந்தனைகளும் இவற்றை மாற்றும் என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  8. "இட்லி தோசை சாம்பாரே தமிழ் மண்ணின் பாரம்பரிய உணவு என்பதானதொரு பிம்பத்தை ஆங்கில ஊடகங்கள் ஏற்படுத்தி உள்ளன.

    பெரும்பான்மையான தொண்ணூறு சத தமிழ் மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடனக் கலைகள் என்னவாயின?

    ஒவ்வொரு மலையாளப் பத்திரிக்கையாளரும் பட்ரோஸ் சும்மராக செயல் படுவது பத்திரிக்கை உலகை மட்டுமல்ல, நீதியை, உண்மையை முடமாக்கிப் போடும் துயரை உற்பத்துக்கும் செயலாகும். இதை உணர்ந்துகொள்ளாத பசத்தில் அவர்களது குறுகிய இனப் பற்று இந்த தேசத்தின் மேன்மையான பன்முகத் தன்மையை உடைத்துப் போடும்."

    எனக்கு பொதுவாகவே ஊடகங்கள், பதிர்ரிகைகள் மேலிருந்த நன்மதிப்புகள் குறைந்து நாளாகிவிட்டது ஐயா... பத்திரிக்கையாளர்கள் தத்தம் சொந்த கருத்துக்களை அது தவறாயினும் மக்கள் மனதில் பதித்துவிட நினைக்கிறார்கள்..அவ்வளவே...அவர்களை விமர்சிக்க தொடங்கினால் நமக்கு மன உளைச்சலே எஞ்சும்...
    பதிவு அருமை ஐயா..

    ReplyDelete
  9. நண்பரே
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..

    ReplyDelete
  10. \\\ பிசாசுக் குட்டி Pk said...
    // இட்லி, தோசை சாம்பாரே தமிழ் மண்ணின் பாரம்பரிய உணவு என்பதானதொரு பிம்பத்தை ஆங்கில ஊடகங்கள் ஏற்படுத்தி உள்ளன. //
    இது குறித்து தான் ஆய்வுகளை ஏற்படுத்த வேண்டுமென தோழர்களை வலியுறுத்தி வந்தேன் . நெத்தியடி வரிகள் ... ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...