Monday, August 3, 2026

குறுநூல் 03

 

யாரது
ஆடிப் பெருக்கன்று
நடுக்காவிரியில்
ஊற்று தோண்டுவது

Thursday, July 30, 2026

குறுநூல் 02

 

யாரும் பார்க்காத
காட்டின் சொச்சம்
பேரழகு

தெரிந்துகொள்ள எத்தனை இருக்கு

 

தோழர் நல்லகண்ணு அவர்களுக்கும் தோழர் சங்கரய்யாவிற்கும் இடையே உள்ள தோழமை எல்லோருக்கும் தெரியும்.
தோழர் நல்லகண்ணுவிற்கும் கலைஞருக்கும் இடையே உள்ள உறவும் அனைவருக்கும் தெரியும்.
தோழர் நல்லகண்ணுவிற்கும் தோழர் கே.முத்தையாவிற்கும் இடையே இருந்த தோழமை குறித்த மிக அரிதான ஒரு தகவலை மானா பாஸ்கரன் தனது ‘’தோழர் நல்லகண்ணு’’ என்ற நூலில் தருகிரார்.
தோழர் நல்லகண்ணுவும் தோழர் கே.முத்தையாவும் வகுப்புத் தோழர்கள். அல்லது குறைந்த பட்சம் பள்ளித் தோழர்கள்.
இதுவே எனக்கு புதிய செய்தி.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு நிதி உதவியோ அல்லது படைக்கு ஆட்களைத் திரட்டவோ கூடாது என்று காங்கிரஸ் மக்களைக் கேட்டுக் கொண்டிருந்தது.
இவர்கள் பள்ளியில் இரண்டாம் உலக யுத்தத்திற்கு ஆதரவாக நாடகம் நடத்தி காங்கிரஸ் செய்யக்கூடாது என்று சொல்லி இருந்த இரண்டையும் சேகரிப்பது என்று சிலர் முயற்சி செய்தனர்.
தோழர்கள் இருவரும் சேர்ந்து அந்த நாடகத்தை நடக்கவிடாமல் பார்த்துக் கொண்டனர்.
பள்ளி நிர்வாகம் தோழர் கே.முத்தையாவை பளியில் இருந்து வெளியேற்றிவிட்டது.
தோழர் கே.முத்தையா பின்னாளில் இலங்கைக்கு சென்றுவிட்டார்.
அங்கிருந்தபடி மாதாமாதம் பத்து ரூபாயும் , வீரகேசரி இதழையும் நல்லகண்ணுவிற்கு அனுப்பி வந்தார்.
வீரகேசரியை தனக்கு வைத்துக் கொண்டு பத்து ரூபாயை நண்பர்களுக்கு செலவிட்டுவிடுவாராம் தோழர் நல்லகண்ணு.
தெரிந்துகொள்ள எத்தனை இருக்கு

குறுநூல் 01

 

சட்டென வந்தெனது
தாகத்தைப்
பருகிப் போ

29.07.2026

இஸ்ரேலைக் குறிப்பிடாமல் ஈரானை எப்படி

 

எரிக் ஹாப்ஸ்பாம் குறித்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
எந்தவொரு நாட்டிற்கென்றும் தனிப்பட்ட வரலாறு என்று ஒன்று இருக்க முடியாது. அப்படி ஒன்றை எழுதிவிடலாம் என்று நினைப்பது அபத்தம்.
இங்கு நடக்கும் ஒன்றிற்கான காரணம் ஏதோவொரு தூர தேசத்தில் இருக்கக் கூடும் என்கிறார்.
அமாம், ஆமாம்.
இஸ்ரேலைக் குறிப்பிடாமல் ஈரானை எப்படி ஒருவரால் எழுதிவிட முடியும்?
அமெரிக்காவையோ அது வீசிய அணுகுண்டுகளையோ குறிப்பிடாமல் ஜப்பானின் வரலாறு சாத்தியமா என்ன?

30.07.2026

Tuesday, July 28, 2026

எதேதோ பிழைக்கும் தமிழ் மண்ணில்

 


அநேகமாக அமைச்சரான கையோடு ஆளுநரே வேந்தர் என்று பொருள்பட பேசிய தமிழ்நாட்டின் விரோதி நீங்கள்.

அவர் இதைத்தானே செய்வார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவரே மனோன்மணியம்தான்.

எங்களுக்கு

நீங்களோ, விஜயோ, கவர்னரோ

எல்லோரும் ஒன்றென்றும் தெரியும்

இந்த புறக்கணிப்பு நடிப்பென்றும் தெரியும்.

எதேதோ பிழைக்கும் தமிழ் மண்ணில்

நீங்களும் பிழைத்துவிட்டுப் போங்கள்


28.07.2026

10 2026

 

நேற்றுன்
கனவில் வந்தபோது
நான் பேரழகாய்த் தெரிந்ததாய்
குறுஞ்செய்தியிலேன் அனுப்புகிறாய்
கனவில் வந்தேனும் சொல்லித் தொலை

வன்னியரசுவிற்கு இது தெரியும்.

 

அனிதாவின் உடல் அரியலூர் மருத்துவமனையில் இருக்கிறது.

CPM கட்சியின் தோழர்கள் ரமேஷ், செல்லத்துரை, மருத்துவர் கருணாகரன்,

விசிகவினர்

அனிதாவின் உறவினர்கள்

மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உடலை வாங்க மறுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

திருமா வருகிறார்.

உடலை நல்லடக்கம் செய்வோம் முதலில் என்கிறார்.

மறுத்தபடி கோஷமிடுகிறார்கள்.

மக்களை சமாதானம் செய்ய திருமா பட்ட பாடு சொல்லி மாளாது.

உடலை வாங்கக் கூடாது என்று கோஷமிட்டவர்களில் பேரசிரியர்கள் இருந்தார்கள், அரசு ஊழியர்கள் இருந்தார்கள், ஆசிரியர்கள் இருந்தார்கள், சிபிஎம் தோழர்கள் இருந்தார்கள்,

விசிக தோழர்களும் இருந்தார்கள்.

வன்னியரசுவிற்கு இது தெரியும்.

எச்சிதுப்பி எச்சி காய்வதற்குண்டான நேர மெனக்கெடல்தான்

 


ஜூலை 2026 ’’பொங்கும் பூம்புனல்’’ வந்திருக்கிறது. இது பதினொன்றாவது இதழ்.

முதலில் தொடர்ச்சியாக பதினோறு இதழ்களைக் கொண்டு வருவதற்கு ஒரு பிடிவாதம் வேண்டும். அது நிறையை இருக்கிறது நண்பர்களிடம்.

அதற்காகவே ஒரு விழா எடுத்து இவர்களைக் கொண்டாட வேண்டும்.

ஒவ்வொரு இதழும் நச்சென்று வந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

வழக்கம்போலவே உள்ளட்டையின் கலைமணி அவர்களின் கவிதையோடு தொடங்குகிறது இதழ். கவிதையும் வைத்திருக்கிற விதமும் அழகு.

பூமணியின் ரீதி, தோப்பு, எதிர்கொண்டு ஆகிய சிறுகதைகள் குறித்த கலைமணியின் பதிவுகள்,

‘’அர்ச்சனா 31 நாட் அவுட்’’ என்ற மலையாளப் படம் குறித்த கலைமணியின் பதிவு

கணேஷ்ராமும் கலைமணியும் தொகுத்தளிக்கும் செய்தித் துளிகள் என்று இதழ் விரிகிறது.

ஆனால் இந்த இதழில் முத்தாய்ப்பாய் படுவது கணேஷ்ராம் எழுதியுள்ள, ’’உலகமயத்தின் மற்றுமொரு சமூக மாறுதல்’’ என்ற கட்டுரையும், ‘’அதனால் என்ன இப்போ?’’ என்ற புனைவு கலந்த அபுனைவும். இரண்டும் வேறு வேறு காரணங்களுக்காக முன் வந்து நிற்கின்றன.

E20 பெட்ரோல் குறித்த கட்டுரை அப்படிவொரு நச். நடையில் இருந்து இதையும் கணேஷ்ராம்தான் எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல்தான் மோடிக்கான அடுத்த தலைவலியாக எழுந்துள்ள சூழலில் இந்தக் கட்டுரை வைக்கும் தரவுகளும் தர்க்கங்களும் அப்படியொரு அழகு.

எத்தனால் குறித்த அரசின் விளக்கங்களை வைத்து அதைத் தகர்த்திருக்கிறது இந்தக் கட்டுரை.

எதையும் சொந்தமாக்காமல் அனைத்தையும் வாடகைக்கு நுகர்வதன் மூலம் நிறைய நுகரலாம் என்கிற தேன் தடவிய தாராளமயத்தின் நச்சுபிஸ்கட் ஏறத்தாழ எல்லோரையும் விழுங்கிக்கொண்டிருக்கிற ஆபத்தை உலகமயத்தின் மற்றுமொரு சமூக மாறுதல் புரிகிற மாதிரி பேசுகிறது. இங்கு புரிகிற மாதிரி என்பதை அழுத்தி அடிக்கோடு இட்டு வாசிக்கக் கேட்கிறேன்.

ஒரு கட்டத்தில் சந்தா முடிந்ததும் நம்மிடம் நாம் நுகர்ந்த ஏதும் இருக்காது. ரெஃபெரன்ஸ் இல்லாத சூழலில் கருத்துச் சண்டைக்கு வாய்ப்பே இருக்காது. அவன் சொல்வதுதான் எல்லாம். மறுக்கத் தரவற்றுப் போகும் அபாயத்தைக் குறித்து கவலைப்படும் கணேஷை சக ஊழியன், தோழன் என்பது தாண்டி பிடித்துக்கொள்ள வேண்டும்.

நான்
காதலென்னும்
கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே

அந்தக்
கருணைக்கு நான்
பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே

என்ற பாடல் யாருக்குப் பிடிக்காது. என்னவொரு இசை. என்னவொரு ஃபீல். இப்படி விரசமில்லாம எவனால எழுத முடியும் என்பார் என் அப்பா.

கூர்ந்து பாருங்களேன், இதுதான் பெண்ணடிமைத்தனத்தின் உச்சம்.

நான் ஜெசி ராணியை அப்படிக் கொண்டாடுவதற்கு அவரிடம் இருக்கும் ஃப்ளோதான் காரணம்.

இதே ஃப்ளோல இதற்கு எதிராக ஜெசி எழுதும்போது, குறித்து வையுங்கள் அவர் பாபுலர் எழுத்தாளராகி விடுவார்.

எலான் மஸ்க் குறித்த, அதானி குறித்த எல்லாமும் அழகு.

போவோமா ஊர்வலம் எனக்குப் பிடித்தப் பகுதி. இன்னும் கொஞ்சம் மெனகெடுங்களேன் என்பது உரிமையோடான என் நேயர் விருப்பம். விஷயத்தில் பிரச்சினை இல்லை. டெலிவெரியில் சன்னமோ சன்னமாக மெனக்கெட்டால் பூம்புனலின் சிக்நேச்சர் இதுதான்.

ஒன்றைச் சொல்ல வேண்டும்.

கணேஷ்ராமிற்குள் ஆயிரம் கட்டுரைகள் ஊறிக்கிடக்கின்றன.

எச்சிதுப்பி எச்சி காய்வதற்குண்டான நேர மெனக்கெடல்தான், ப்ரொஃபஷனல் டச் முழுவீச்சில் மிளிரும்.

பூம்புனல் இல்லை எனில் நானே அவரிடம் கட்டுரை கேட்பேன். இருக்கு அவரிடம்.

படைப்புகள் வர ஆரம்பித்தால் வேற லெவல்தான்.

மெனக்கெடும் அனைவரையும் இறுகப் பற்றிக் கொள்கிறேன். 

அந்த ஏழைகளுக்கு நிலம் கிடைக்கும்வரை மகிழ்ச்சியோடு அடி வாங்குவோம்

 


இந்தப் படத்தை தம்பி Senthil Vel பக்கத்திலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் படத்தோடு,

போராடும் தோழமைக் கட்சிகளுக்கே பாதுகாப்பில்லை. மக்களுக்கெங்கே பாதுகாப்பிருக்கப் போகிறது என்று சொல்லியிருந்தார்.

உண்மைதான். என்ன, போராடுவது யாரெனினும் எந்த ஆட்சியிலும் பாதுகாப்பில்லை என்பதுதான் கள எதார்த்தம்.

அவிநாசிக்கு அருகேயுள்ள ஈட்டி வீராம்பாளையத்திலுள்ள அறிவொளி நகரில் வீட்டு நிலமற்ற மக்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது.

இது நடந்தது 1994 இல்.

ஆனால் அந்த நிலங்களை அளந்து பயனாளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை.

இது தொடங்கியபோது ஜெயலலிதா முதல்வர்

பிறகு 1996 முதல் கலைஞர் முதல்வர்

2011 முதல் மீண்டும் ஜெயலலிதா முதல்வர்

பிறகு பன்னீர் செல்வம் முதல்வர்

பிறகு பழனிசாமி முதல்வர்

அதன்பிறகு என் ஆயுளின் சிறந்த முதல்வர் என்று நான் கருதும் ஸ்டாலின் முதல்வர்

இப்போது விஜய்

எல்லோரது காலத்திலும் போராடியாயிற்று

எல்லோரிமும் அடிவாங்கியாயிற்று

இப்போதும் 15 நாட்களுக்குள் அளந்து தருவதாகக் கூறியிருக்கிறார்கள்.

இல்லையென்றால் 17.08.2026 அன்று மீண்டும் வருவோம்

அடிவாங்குவோம்

அந்த ஏழைகளுக்கு நிலம் கிடைக்கும்வரை மகிழ்ச்சியோடு அடி வாங்குவோம்

அவ்வளவுதான் செந்தில்


வன்னியரசு ப்ளீஸ்

 



இப்பவும் சொல்கிறேன்

உங்க உசரத்திற்கு இது அழகல்ல

அடச் சீ போ னு நகர வச்சுடாதீங்க

வன்னியரசு ப்ளீஸ்

காணாமல் போனவர்கள் யாரேனும் உள்ளனரா

 

ஒன்றிற்கொன்று தொடர்புடையதும் மிக முக்கியமானதுமான மூன்று செய்திகளை 28.07.2026 தீக்கதிரில் பார்க்க வாய்த்தது.
25.07.2026 அன்று பீகாரில் நீட் தாள் கசிவிற்கு எதிராக டில்லியில் நடந்த ஆர்ப்பட்டத்திற்கு ஆதராக பீகாரில் ஒரு பந்திற்கு SFI உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதில் கடையை அடைத்துவிட்டு சாலையில் நடந்து வந்த 15 வயது சலீமை பீகார் காவலர் ஒருவர் AK 47 துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.
நல்வாய்ப்பாக கழுத்தில் இருந்து குண்டு எடுக்கப்பட்டு பிள்ளை நலமாக இருக்கிறான்.
AK 47 காவலருக்கு எப்படி வந்தது? அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இது போதாது. அவரைக் கைது செய்ய வேண்டும்.
கரப்பான் பூச்சிகள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டார்கள் என்பதற்காக மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையனவர்கள் முஸ்லிம் என்று அர்பா கானும் ஷெர்வானி என்ற பத்திரிக்கையாளர் கூறுகிறார்.
டில்லி போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டோர்மீது வழக்கெதுவும் இருக்காது. அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இது மீறப்படுவதாகவும். சரி செய்யப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்றும் CJP செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் கூறுகிறார்.
பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
காணாமல் போனவர்கள் யாரேனும் உள்ளனரா என்பதையும் கண்டடைய வேண்டும்

Tuesday, June 2, 2026

ஹெப்சிபா 100

 பில்டர் காபியும் ஹிந்து பேப்பருமாக இருந்த எழுத்துலகில் அக்கானி இனிப்பாக பனைமணம் கமழ எழுதியவர் ஹெப்சிபா. 

Monday, May 11, 2026

கலைஞர் + நீங்கள், ஸ்டாலின் சார்

 


அன்பிற்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சார்,
 
வணக்கம்.
 
கீழ்க்காணும் எஸ். அறிவுமணியின் கவிதையை நீங்கள் வாசித்திருப்பதற்கு கொஞ்சமும் வாய்ப்பில்லை. ஆனால் இந்த கவிதை எதைக் கோரி கையேந்தி நிற்கிறதோ அதை நிறைவேற்றிய இருவரில் நீங்கள் ஒருவர். மற்றொருவர் பெருந்தலைவர் காமராசர்.
 
இருவருக்கும் என்னவொரு பொருத்தமெனில் அவரும் இந்த கவிதையை வாசித்திருக்க வாய்ப்பில்லை. மேற்கொண்டு நான் இந்தக் கடிதத்தைத் தொடர்வதற்கு முன் தயவு செய்து இந்த கவிதையை ஒருமுறை வாசித்து விடுங்கள்.
 
”தாயே
தாலாட்டை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி தூங்குவது?
 
தந்தையே
அறிவுரையை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி கேட்பது?
 
ஆசானே
பாடத்தை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படி படிப்பது?
 
எல்லோரும்
எல்லாவற்றையும் நிறுத்துங்கள்
என் பசிக்கு
பதில் சொல்லுங்கள்”
 
பொழிப்புரை தேவைப்படாத எளிய வார்த்தைகள். ஆனால் அளவிட முடியாத ஆழம். பசி பத்தையும் பறக்க வைக்கும் என்பதை அறிவோம்.
 
பசிக்கிற வயிறோடு படிப்பது சாத்தியப்படாது என்கிற எதார்த்தத்தை பெருந்தலைவரும் நீங்களும் மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அந்த ஈரம்தான் என்னைப்போன்ற மாற்று இயக்கத்தினரையும் உங்களின்பால் இவ்வளவு இறுக்கமாகக் கட்டிப்போட்டிருக்கிறது.
 
அன்றைய பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு ஆய்விற்காக ஒரு பள்ளிக்கு செல்கிறார். அன்றைய கூட்டு வழிபாட்டின்போது நிறைய குழந்தைகள் மயங்கி விழுந்திருக்கிறார்கள். காலை உணவு இல்லாததால்தான் குழந்தைகள் மயங்கி விழுவதாகவும், இது தினமும் நடக்கிற ஒன்றுதானென்றும் அவருக்குத் தெரிய வருகிறது.
 
இந்த செய்தியை நெ.து.சுந்தரவடிவேலு, அன்றைய முதல்வர்  பெருந்தலைவர் காமராசருக்கு கடத்துகிறார். பெருந்தலைவர் பதைபதைத்துப் போகிறார். நிலா காட்டி சோறூட்டும் வழக்கம் இருக்கிற பூமியில் குழந்தைகளை பசி தின்று சாய்ப்பதா? என்று துடிக்கிறார்.
 
அதிகாரிகளோடு இருவரும் உரையாடுகிறார்கள். அப்போதிருந்த நிதிச்சுமையில் எதுவும் அரசால் செய்ய இயலாது என்ற எதார்த்தத்தை எடுத்து வைக்கிறார்கள் அதிகாரிகள்.
 
“தெருவிறங்கி பிச்சையெடுக்கிறேன். நிறைந்த வயிறோடு குழந்தைகள் படிக்கட்டும்.”
 
இப்படித்தான் பெருந்தலைவர் சொன்னாராம் ஸ்டாலின் சார்.
 
இதன் விளைவாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் வருகிறது. காலை உணவு இல்லை என்பதால்தான் பிள்ளைகள் மயங்கி விழுந்தது. ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ மதிய உணவு.
 
எனவே காலையில் கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டங்களில் பிள்ளைகள் மயங்கி விழுவது தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. அதேநேரம் மதிய உணவுத் திட்டம் பேரதிகமாக பிள்ளைகளை பள்ளிக்கு ஈர்த்தது.
 
வேறொன்றுமில்லை, அன்றைய வறுமை அப்படித்தான் இருந்தது. பள்ளிக்குப் போனால் மதிய உணவேனும் கிடைக்கும் என்பதால் பிள்ளைகளின் வரத்து அதிகரித்தது.
 
இப்படியாக பள்ளிக்கு வந்தவர்களில் பலர் பெரிய மருத்துவர்களாக மாறினார்கள் என்பது வரலாறு.
 
இதற்கு காரணம் பள்ளியில் கிடைத்த கல்வியா? அல்லது பள்ளியில் கிடைத்த உணவா? என்று பட்டிமன்றமே நடத்தலாம். ஆனால் இரண்டில் ஒன்றை ஒருபோதும் தீர்ப்பாகக் கூறமுடியாது. பள்ளியில் கிடைத்த கல்வியும், பசியாற்றிய மதிய உணவும்தான் இதற்கு காரணம்.
 
எண்பதுகளின் மத்தியில் வேலைக்கு வருகிறேன். பணிக்கு வந்த முதல் நாளே கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பசியால் பிள்ளைகள் மயங்கி விழுவதைப் பார்க்க முடிகிறது. அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும், ஒவ்வொரு நாளும் குழந்தைகள் விழுந்துகொண்டே இருப்பது தொடர்கிறது. இத்தனைக்கும் எங்கள் பள்ளி கொஞ்சம் பெரிய குழந்தைகள் படிக்கும் ஒரு மேல்நிலைப் பள்ளி. எனில், சின்ன குழந்தைகள் படிக்கும் தொடக்க பள்ளிகளின் நிலை?
 
சில நண்பர்கள் குழந்தைகளுக்கான “காலை உணவு” குறித்து கத்தத் தொடங்குகிறோம். நாங்கள் பேசி யாருக்குக் கேட்கும் ஸ்டாலின் சார்?
ஆனாலும் விடாது வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இதுகுறித்து பேசுகிறோம்.
 
அன்றைய பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் கார்மேகம் சார் மாதிரி அதிகாரிகளிடம் இதைக் கொண்டு போகிறோம். அவர்களும் பேச ஆரம்பிக்கிறார்கள். ஆனால் விடியவில்லை.
 
இந்த கோரிக்கை எப்படி, யார்வழியாக உங்களுக்கு வந்தது என்று தெரியவில்லை. அரசு மற்றும் ஆதிதிராவிட தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வருகிறது.
 
போதாது என்கிறோம். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துகிறீர்கள்.
 
பள்ளியின் வருகைப்பதிவு எகிருகிறது. எனக்குத் தெரிந்த ஒரு பள்ளியில் பள்ளிக்கே வராத பத்து குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வர ஆரம்பிக்கிறார்கள்.
 
அதில் ஒரு குழந்தை “கலைத் திருவிழா”வில் மாவட்ட அளவில் ஜொலிக்கிறான். இதன் விளைவுகள் முழுவதும் வெளிவர இன்னும் பதினைந்து ஆண்டுகளாகும்.
 
உங்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு இடத்தில் “என் சகோதரிகள் இன்னும் ஒரு அரைமணி நேரம் கூடுதலாக ஓய்வெடுக்கட்டும் என்பதற்காகவும்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன்” எ்ன்று கூறினீர்கள்.
 
இப்படியெல்லாம் சிந்திக்க எப்போதாவதுதான் உங்களைப்போல தலைவர்கள் கிடைப்பார்கள். இப்படி அபூர்வமாய் கிடைக்கும் தலைவர்களை நாங்கள் இதயமே இல்லாமல் தோற்கடிப்போம்.
ன்ன செய்வது, எங்களது நன்றி அப்படிப்பட்டது ஸ்டாலின் சார்.
 
உங்களது தோல்வி எனது இரண்டு எதிர்பார்ப்புகளில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது ஸ்டாலின் சார்.
 
திங்கள் காலை ரவை உப்புமா கொடுத்தீர்கள். பிறகு அதை அரிசி பொங்கலாக மாற்றினீர்கள்.
 
செவ்வாயன்று சேமியா கிச்சடி, புதனன்று அரிசி பொங்கல், வியாழனன்று அரிசி உப்புமா, வெள்ளியன்று கோதுமை உப்புமா என்று கொடுத்தீர்கள்.
 
அரிசி உணவுகளை குழந்தைகள் கொட்டுகிறார்கள் என்று சொன்னார்கள்.
 
ஒரு குழு அமைத்து குழந்தைகளின் விருப்பமறிந்து அவர்களுக்குப் பிடித்த உணவைத் தரலாமே என்று 2025 செப்டம்பரில் எழுதினேன். அந்த மாதம் நடந்த எனது மகளது திருமணத்திற்கு வந்திருந்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சார் அந்தப் பதிவு குறித்து என்னோடு பேசினார்.
 
அக்டோபர் மாதம் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இருபது பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து குழுவினரை அனுப்புகிறீர்கள். அவர்கள் தினமும் காலை பள்ளிக்கு வந்து குழந்தைகளின் உணவு விருப்பத்தைக் கேட்டறிந்து போனார்கள்.
 
பிள்ளைகள், பூரி, இட்லியெல்லாம் கேட்டிருக்கிறார்கள். கிடைக்கும் என்று ஆசையாக இருந்தேன்.
 
ஏழை குழந்தைகளின் இட்லி கனவை உங்களது தோல்வி மறுதலித்திருக்கிறது சார்.
 
இந்த ஜூன் முதல் இந்தத் திட்டம் நடுநிலைப் பள்ளிகள் வரைக்கும் விரிவு படுத்தப்படும் என்று கூறினீர்கள். என்ன ஆகுமென்று தெரியவில்லை.
எனக்கு வயது 63 ஆகிறது சார். எனக்கு விவரம் தெரிந்து ஏழு முதல்வர்களைப் பார்த்திருக்கிறேன். பெருந்தலைவர், அண்ணா இவர்கள் ஆண்ட காலத்தில் நான் இருந்தேன் என்றாலும் விவரம் தெரியாது.
 
நான் பார்த்தவரை உங்களை மாதிரி ஒரு முதல்வரை நான் பார்த்ததில்லை ஸ்டாலின் சார். ”கலைஞர் +”  நீங்கள்.
 
இன்னுமொரு முறையேனும் உங்களது ஆட்சியைப் பார்த்துவிட்டுப் போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது சார்.
 
மத சார்பின்மைக்கு ஆதரவான களத்தில், சமூகநீதிக்கான போராட்ட களத்தில் எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்.
 
மிக்க நன்றிங்க ஸ்டாலின் சார்.
 
அன்புடன்,
இரா.எட்வின்.    


Tuesday, April 28, 2026

09 2026

 

சம்பந்தி
ஒரு கார்
வாங்கியிருக்கிறார்
சுதா
ஒரு வீடு
வாங்கியிருக்கிறாள்
பாஜக
ஏழு எம்பிக்களை
வாங்கியிருக்கிறது
என்பதாக
இந்தியாவின் நேற்று
நிறைவாகியிருக்கிறது

பூரிப்பைத் தரும் பொங்கும் பூம்புனல்

 


ஒவ்வொரு மாற்றிதழ் வரும் பொழுதும் எனக்கு எண்பதுகளின் மத்தியில் "செந்தூரம்" இதழ் துவக்க விழாவின்போது பேராசிரியர் பெரியார்தாசன் பேசியதுதான் நினைவிற்கு வரும்.
"சிற்றிதழ் நடத்துவது என்பது காஸ்ட்லியான தற்கொலை" என்று அவர் சொன்னபோது நிறையபேர் முகம் சுளித்தார்கள்.
இது நடந்து நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எனவே நான் அன்று முகம் சுளித்தேனா அல்லது சிரித்தேனா என்பது நினைவில் இல்லை.
ஆனால் செந்தூரம் இதழின் ஆசிரியர் ஜெகதீஷ் அப்போது விழுந்து விழுந்து சிரித்தார்.
பேராசிரியரின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை காக்கையை ("Kaakkai Cirakinile - Tamil Magazine") ஆரம்பித்த ஆரம்ப காலங்களிலேயே உணர்ந்துகொள்ள வாய்த்தது.
ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதி வாக்கில் இதழை அச்சிற்கு அனுப்பிய கையோடு செத்துத்தான் போக வேண்டும்.
ஐந்தாம் தேதி வாக்கில் யாரவது அழைத்து இதழ் நன்றாக வந்திருக்கு என்று சொன்ன மாத்திரத்தில் மீண்டும் உயிர் வந்துவிடும்.
இப்படியாக, மாற்றிதழ் நடத்துபவர்கள் ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதி செத்து 5 ஆம் தேதி உயிர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டவர்கள்.
அன்றைய கூட்டத்தில் நன்றி சொல்லும்போது ஜெகதீஷ் சிரித்துக்கொண்டே சொன்னார்,
"இந்த இதழ் நிச்சயம். அடுத்த இதழ் லட்சியம்’
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் (aiiea) திருச்சி கண்டோன்மெண்ட் கிளையின் கணேஷ்ராம் மற்றும் கலைமணி உள்ளிட்ட தோழர்கள் கொண்டுவரும் "பொங்கும் பூம்புனல்’ எட்டாவது இதழ் வந்திருக்கிறது.
ஆக இந்த தோழர்கள் இதுவரை எட்டுமுறை உயிர்த்தெழுந்திருக்கிறார்கள். வாழையடி வாழையாக இந்த உயிர்த்தெழல்கள் தொடர வேண்டும் என்று ஆசை ஆசையாக வாழ்த்துகிறேன்.
எட்டு இதழ்களையும் வாசிக்கும் வாய்ப்பை இந்த நண்பர்கள் எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
அதற்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"பிறப்பொக்கும்..." என்பதை சிக்நேச்சராகக் கொண்டிருக்கும் இந்த பத்திரிக்கையின் எட்டு இதழ்களும் அந்த முழக்கத்திற்கு உயிர்கொடுக்கின்றன.
இவ்வளவுதான், இனி இவர்களே நினைத்தாலும் ஒருபோதும் இவர்களால் பிறழ முடியாது.
" வாக்கு - வர்க்கப் போராட்டத்தின் ஆயுதம்" என்ற இந்த இதழின் தலையங்கத்தின் தலைப்பே வித்தியாசமானது.
வாக்கை வர்க்கப்போராட்டத்தின் ஆயுதமாகப் பார்க்கும் தலையங்கங்கள் பல இடதுசாரி இதழ்களிலேயே காணக்கிடைக்காதவை.
"ஒரு தொழிற்சங்கத்திற்கு, எளிய மற்றும் உழைக்கும் மக்களுக்கான பொருளாதாரக் கொள்கையை முன்வைத்து அதற்கு ஆதரவளிக்கும் அரசியல் அமைப்பை தேர்வு செய்யும் நோக்கில் தொழிலாளர்களைத் திரட்டி அவர்களுக்கு இணக்கமான அரசாங்கத்தை தேர்வு செய்ய வழிகாட்டுவது என்பது முக்கிய பணிகளில் ஒன்று"
ஒரு வெகுஜன அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தொழிற்சங்கத்திற்குரிய பாத்திரத்தை கேட்கிறமாதிரி, வாசிக்கிற மாதிரி இவ்வளவு அழகாக யாராலும் வைத்துவிட முடியாது.
"இந்த முதலாளித்துவ அமைப்பில் தொழிற்சங்கம் கோருகிற பொருளாதாரக் கொள்கைகளை முழுவதுமாக பின்பற்றும் அரசியல் அமைப்பை அடையாளம் காண்பது அரிது" என்றும் இந்தத் தலையங்கம் சரியாக உண்ர்த்துத்துகிறது.
இந்த வேலையை செய்வதில் இடதுகள் படும் வலியை பாடுகளை இந்த தலையங்கம் குறிப்பிடுகிறது.
உச்சத்தில் இருந்து வந்து வலியோடு வந்திருப்பதாக பிதற்றல்களை மட்டுமே கேட்டு சலித்துப்போன நமக்கு தலைமுறை தலைமுறையாக இடதுகள் படும் வலியை புரிந்துகொண்டிருக்கும் இந்த நண்பர்களுக்கு நன்றியை சொல்லாவிட்டால் அந்த வார்த்தையை வைத்துக்கொண்டு வேறென்ன செய்வது?
இந்த எழுத்து நான் நன்கறிந்தது என்ற வகையில் இது தோழர் கணேசுடையது என்றே உணர்கிறேன். அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
உங்களது ஏழாயிரம் ஆண்டு நாகரிகத்தை இன்று இரவிற்குள் அழிக்கப்போகிறேன் என்று ட்ரம்ப் கொக்கரித்த அன்று இரவு முடிந்தால் அழித்துப்பார் என்று ஈரான் மக்கள் இரவு முழுக்க தெருவிற்கு வந்து சுவராக நின்றார்கள்.
அதை, "நாகரிகத்தின் சுவர்" என்ற் தலைப்பில் கவிதையாக்கி இருக்கிறார் கலைமணி.
"தாயொருத்தியின் தோள்பற்றி
மகன் வந்தான்
தந்தையின் கரம் கோர்த்து
தனயன் வந்தான்
நாகரிகம் அழியாதென்பதை
அவர்கள்
உயிரால்
உடலால்
சொன்னார்கள்"
அந்தப் போராட்டத்தை மிகையின்றி சொல்லும் கலைமணி,
"பெருந்துன்பத்தின்முன்
நம்பிக்கையும்
அச்சமும்
தைரியமும்
ஒருங்கே தெறித்த"
போராட்டமென்கிறார். அந்த ’அச்சமும்’ என்பது அந்தக் கவிதையை எவ்வளவு எதார்த்தமாகக் கடத்துகிறது.
பாரசீக நாகரிகத்தை "நாகரிகத்தின் அழியாத முதிர்ச்சி" என்று முடியும் அந்த கவிதையை இன்குலாப் படித்திருந்தால் நிச்சயம் மெச்சியிருப்பார்.
"சமூக ஊடகங்கள் - ஒரு மாய உலகம்" என்ற மேரி ஜெசி ராணியின் கட்டுரை மாற்று இதழ்களுக்கேயான கட்டுரையின் சிக்னேச்சர்.
அப்படியொரு ப்ளோ .
சுமதியின் அழகியல் அபாரம். ஏதோ ஐம்பது ஆண்டுகளாக எழுதுபவரின் லாவகம்.
உள்ளே செல்லும் காற்றை வெளியே விடாத பந்து உதைபடுதாம். ஒரு துளையில் வாங்கும் காற்றை இசையாக மறு துளையில் இசையாத் தருவதால்
புல்லாங்குழல் முத்தம் பெறுகிறதாம்.
அய்யோடா.
தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டிருக்கும் படங்கள் அப்படிப் பொருந்திப் போகின்றன.
அட்டைமுதல் அட்டைவரை கொட்டிக் கிடக்கு.
இதழ்கள் வர வர நாமும் பேசுவோம்.
பள்ளிக்கு ஒரு இதழ் என்று ஒரு கட்டுரையை பதினைந்து அண்டுகளுக்கு முன் எழுதினேன்.
வேண்டுமானால் பாருங்கள். இந்த இதழ் ஒவ்வொரு கிளையில் இருந்தும் ஒரு இதழைக் கொண்டுவரும்.
வாழ்த்துகள்.

28.04.2026

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...