Friday, March 24, 2017

என்னை என்னுள் அலைய விட்டிருக்கிறீர்கள்




ஒவ்வொரு சிற்றிதழ் வரும்போதும் வாசித்துவிட்டு அதுகுறித்து எழுத வேண்டும் என்று தோன்றும். ஆனால் எழுத வாய்க்காது. இதே நிலைதான் நூல்களுக்கும்.
ஆனால் “சிற்றிதழ்கள் உலகம்” வந்ததும் எழுதுவதற்கான வாய்ப்பும் அமைந்துவிட்டது.
நானும் சிற்றிதழ்களால் வளர்ந்தவன்தான்.
எண்பத்தி ஒன்றாம் ஆண்டு “தேன் மழை”யில்தான் எனது நான்குவரிக் கவிதை ஒன்று வெளி வந்தது. நான்கே நான்கு வரி, எண்ணிச் சொல்வதெனில் ஏழே ஏழு வார்த்தைகள்.
வீடு போகும்போது ஏறத்தாழ இரவு ஒன்பது மணி. வீட்டிற்குள் நுழையும்போதே “ கவிஞரு வராரு. டீயக் குடு” என்றதும் என்னோட அண்ணன் ( மாமா பையந்தான் எனக்கு அண்ணன். மாமா பொண்ணுதான் அக்கா. மாமா வீட்டிலேயே வளர்ந்தவன்) ஒன்னுக்கு எட்டு சைசில் இருந்த புத்தகத்தை (நீள வாக்கில் இரண்டாக மடிக்கப் பட்டிருந்தது) நீட்டினார். வாங்கிப் பார்த்தால் ’தேன்மழை’. புரிந்து விட்டது. எழுத்துக்கூட்டி என் பெயரை ஏழெட்டுமுறை வாசித்தேன்.
சைக்கிளை எடுத்தவனிடம் ‘எங்கடா இந்த நேரத்துல?” என்கிறார் அண்ணான். ராஜாட்ட (பொன்மலை ராஜா) காட்டனும் என்று நகர்ந்தவனிடம் “ அப்படியே பெசிலிக்கிட்டயும் காட்டிட்டு வந்துரு என்றார். இரண்டையும் செய்தேன்.
அந்த ஒரு வாரம் மாமாவின் நண்பர்கள் ரெண்டு ப்ளாக் அக்காக்கள், அத்தைகள், அண்ணன்கள் பாப்பாக்கள் மாமாவோட பணியாற்றும் மாமாக்கள் எல்லோரும் விசாரிக்கிறார்கள்.
அப்படியே விரிகிறது.
நூற்றுக் கணக்கான இதழ்களில் கவிதைகள் பிரசுரமாக தாஸ்னா விழாக்களில் பங்கேற்க அழைக்கிறார்கள்.
88 ற்கும் 90 கும் இடையே நண்பன் ராஜாவோடு இணைந்து “தாகம்” என்ற இதழையும் பிறகு “ மானுடம்” என்ற இதழையும் நடத்துகிறேன். தொடர முடியவில்லை. ஆனால் ஒருநாள் என்னிடம் படைப்பு வாங்குவதற்காக தோழன் சுகனும்வெற்றிப்பேரொளி யும் சமயபுரம் வந்து ஒரு இரவு என்னோடு தங்கி கவிதை வாங்கிப் போகிறார்கள்.
சுகனைப் பற்றி எழுத வேண்டும். நாந்தான் எழுத வேண்டும்.
பிறகு முத்துப் பேட்டையில் நடந்த மேதினப் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு கிளம்பும்போது இரா காமராசு (Kamarasu Era) "தோழர், ஏன் நீங்கள் ப்ரோஸ் எழுதக் கூடாது?’ என்றார் எழுதினேன். “தாமரை” யில் பிரசுரித்தார்.
இதைப் பார்த்த, அப்போது ‘இளைஞர் முழக்கம்” இதழின் ஆசிரியராயிருந்த தம்பி ரமேஷ் பாபு (Ramesh Babu) ‘ஏன் தோழா, இ.மு க்கெல்லாம் எழுத மாட்டீங்களோ?” என்று கிண்டலடிக்க ஒரு பத்துப் பதினைந்து கட்டுரைகள் இளைஞர் முழக்கத்தில் வந்தன.
அப்புறம்தான் தெரியுமே?
தோழர் சித்தனோடு இணைந்து “யுகமாயினி”. கொஞ்ச காலம் சிவகாசியிலிருந்து யுகமாயினி ரெகுலர் சர்வீசில் பெரம்பலூர் வரும். நாந்தான் தோழன் ரமேஷோடு இணைந்து கவர் போட்டு முகவரி எழுதி அஞ்சல் செய்வேன்.
இப்போது “காக்கைச் சிறகினிலே”.
என்னைப் பொறுத்தவரை சிற்றிதழ்களை மாற்றிதழ்கள் என்பேன். காக்கையை அப்படித்தான் உருவாக்கம் செய்கிறோம்.
தோழர் பொள்ளாச்சி நசன் போலவே தோழர் Krish Ramadasசிற்ரிதழ்களைப் பாதுகாத்து ஆவணப் படுத்தி அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்ற வெறி இருக்கிறது. சம்பாரிப்பதில் ஒரு பகுதியையும் தனது நேரத்தின் ஒரு பகுதியையும் இதற்காக அவர் செலவு செய்கிறார், அதற்கென் நன்றி.
இதில் இலக்கியத்தைத் தேட வேண்டாம், இது சிற்றிதழ்கள் குறித்த ஆவணம் என்கிறார். இதுதான் முக்கியமானது.
நான் மகிழ அதுமட்டுமல்ல காரணம்,
1) பெரம்பலூர் மனிதர் ஒருவரிடமிருந்து இப்படிப்பட்ட முயற்சி, அதுவும் பெரம்பலூர் முகவரியோடு. ஏற்கனவே என் பிள்ளை அம்மணி (Chandra Mouli ’கவண்’ என்றொரு இதழை அவ்வப்போது கொண்டு வருகிறான்.
2)என் நண்பர் முருக தீட்சண்யா முருக தீட்சண்யா ஆசிரியர் குழுவில் இருக்கிறார்
3) தோழர் Markandan Muthusamy எழுதுகிறார்
மகிழ்கிறேன். தொடருங்கள் ராதாஸ்.கிருஷ் பக்கம் தொடரட்டும். ஆசிப் அலிக்கு என் அன்பையும் பாராட்டையும் சொல்லுங்கள்.
வெகு காலத்திற்குப் பிறகு என்னை என்னுள் அலைய விட்டிருக்கிறீர்கள்.
அன்பு, முத்தம், வாழ்த்து

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...