Monday, November 30, 2015

65/66, காக்கைச் சிறகினிலே நவம்பர் 2015


திருப்பி அனுப்பிய விருதுகளை உரியவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.” என்று சொல்ல வேண்டிய நிலைமை சாகித்திய அகாதமிக்கு இதற்குமுன் எப்போதும் நேர்ந்ததுண்டா என்று தெரியவில்லை.

பத்தோடு பதினொன்றாக கல்புர்கி அவர்களின் கொலை குறித்த கொந்தளிப்பும் பையப் பைய நீர்த்துப் போகும் என்ற ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கையே அகாதமியின் நம்பிக்கையாகவும் இருந்திருக்கக் கூடும். ஏறத்தாழ ஆளும் வர்க்கத்தின் ஒருவகைப் பிரதிநிதியே சாகித்திய அகாதமியும். அதே நேரத்தில் அவர்களின் எதிர்பார்ப்பு அப்படி ஒன்றும் பெரிதாய் பொய்த்துப் போனதாகவும் கொள்ள முடியாது.

ஒரு மாபெரும் ஆளுமையின் கொலையானது வெகுஜனத் திரளின் கொந்தளிப்பை அது பெற்றிருக்க வேண்டிய அளவிற்கு சம்பாதிக்கவில்லை என்று சொல்வோமேயானால் அது நமது பெருந்தன்மையின் வெளிப்பாடாகவே அமையும். இந்தத் தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக இந்தக் கொலை குறித்த அசைவு ஏதும் இல்லை என்பதை நாம் முதலில் ஏற்க வேண்டும். எவ்வளவு பெரிய ஆளுமையின், இந்தச் சமூகத்தை நேசித்த ஒரு சிந்தனையாளனின் கொலை அது. இந்த இழப்பின் பெரு வலியை எம் ஜனங்கள் அறிந்திருக்கவில்லை. ஒரு ரௌடியின் கொலைக்குகூட அவன் சார்ந்த பகுதி கொந்தளிக்கும். அந்த அளவில்கூட இந்த மாமேதைக்கு நிகழவில்லை. இதற்கு என்ன காரணம் என்று தேடினால்அவரை வெகு ஜனங்களில் யாருக்கும் தெரியாதுஎன்ற உண்மை நம் முகமறையும்.

ஒரு சமூகச் சொத்தின் கொலைக்குப் பிறகு ஒன்றுதிரண்டு அவருக்காக குரல் கொடுக்கும் இந்த அறிவு ஜீவி உலகம் ( அல்லது என்னைப் போன்ற வாசக உலகம் ) அவர் உயிரோடு இருந்தபோது அவரை ஒன்று திரண்டு மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தோமா என்றால் இல்லையே. இதுதான் நரேந்திர தபோல்கர் கொலை செய்யப் பட்டபோதும் நடந்தது. ஒரே ஒரு சன்னமான முன்னேற்றம் என்னவெனில் நரேந்திர தபோல்கரின் மரணத்தைவிட கல்பர்கியின் கொலை ஓரளவிற்கு பொதுத் திரளிடம் வெளிச்சத்தைப் பெற்றுள்ளது.

இந்த அளவிற்கு எதிர்ப்பு எழுத்தாளுமைகளிடமிருந்து கிளம்பும் என்று மத அடிப்படைவாதிகளும் அகாதமியும் எதிர்பார்த்திருக்க வில்லை.

வழக்கமாக விருதுகளை செலவழிக்கும் அகாதமி இன்று திரும்பி வீசப்பட்ட விருதுகளால் நிறம்பி வழிகிறது. உலகச் சான்றோர்களின் உமிழ்தலுக்கு ஆளாகிவிடக் கூடாது என்கிற அச்சமும் தன்மீது போலியாகவேனும் கட்டமைக்கப் பட்டிருக்கும் பிம்பம் முற்றாய் சேதப் பட்டுவிடக் கூடாதே என்ற கவலையும்தான் அகாதமியை கண்டனம் செய்ய வைத்திருக்கிறது.

இந்த அளவிற்கேனும் எதிர்ப்பு கிளம்பியிருக்காவிட்டால் ஒருக்கால் இன்னொமொரு கன்னட எழுத்தாளுமையான பகவானையும் நாம் இழந்திருக்க வாய்ப்புண்டு.  

கல்பர்கி அவர்களின் கொலையை ஆதரித்து ட்விட்டரில் புவத் ஷெட்டி எழுதுகிறார் என்றால் அதன் பொருள் என்ன? புவத் ஷெட்டி ஒன்றும் கண்டுபிடிக்கவே இயலாத சராசரிக்கும் கீழான மனிதனல்ல. பந்தவால் என்ற பகுதியின் பஜ்ரங்தல் அமைப்பின் இணைச் செயலாளர் அவர். கல்புர்கியின் கொலையை நியாயப் படுத்திக் கொண்டாடும் அதே ட்விட்டரில் இதே நிலைதான் பகவானுக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்.

ஒரு சாதாரண முகநூல் நிலைத் தகவலுக்காக ஒரு பெண் குழந்தையும் அதற்கு லைக் போட்டதற்காக இன்னொரு பெண் குழந்தையும் கைது செய்யப்பட்டதை இந்த நாடறியும். கொஞ்சமும் வன்மமற்ற அந்த எழுத்துக்கே அப்படியொரு நடவடிக்கை எனில் புவத் ஷெட்டி மீது என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப் பட்டுள்ளது.

ஒரு சின்னஞ்சிறு குழந்தைகூட தான் வாங்கிய பால சாகித்திய புரஷ்கார் விருதினை திருப்பி அனுப்பியிருக்கிறாள் என்ற செய்தி நம்மை மகிழ்ந்து வியக்க வைக்கிறது. அவள் உள்ளிட்டு விருதுகளைத் திருப்பிய அனைவரையும் வாழ்த்துகிறோம். அதே வேளை விருதுகளைத் திருப்பாதவர்கள்மீது ஏளனமாய் வைக்கப் படும் விமர்சனங்களை அருள்கூர்ந்து கைவிடுமாறும் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம். விருதுகளைத் திருப்பித்தான் எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும் என்பதில்லை. அது ஒரு எதிர்ப்பின் வடிவம் அவ்வளவே.

மகள் செங்கொடி தன்னை தீயிலிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தாள். அதற்காக நீங்கள் எல்லாம் ஏன் உயிரோடு இருக்கிறீர்கள் என்று நம்மை கேட்பது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இந்த விமர்சனம்.

நல்ல ஆளுமைகளை பொது மக்களிடம் கொண்டு போவோம். நல்ல எழுத்துக்களை உடனுக்குடன் மொழிபெயர்த்து கொண்டு செல்வோம். எழுத்தாளர்கள் மக்களோடு மக்களாய் கலந்து வாழ்வோம்.

மக்களிடமிருந்து அந்நியப் பட்டுக் கிடக்கும் வரை இதுமாதிரி கொடுமைகள் தொடரவே தொடரும் என்பதை உணர்வோம்.
**************************************************************************************  
இது காக்கையின் ஐம்பதாவது இதழ். அடிக்கடி நான் மேற்கோள் காட்டும் பெரியார் தாசனின் உரையின் ஒரு பகுதியைத்தான் இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால்செந்தூரம்இதழை வெளியிட்டு பெரியார்தாசன் பேசினார்,

இலக்கியப் பத்திரிக்கை நடத்துவது என்பது காஸ்ட்லியான தற்கொலை. அவற்றின் ஆயுளைப் பற்றி சொல்ல வேண்டுமானால்இந்த இதழ் நிச்சயம், அடுத்த இதழ் லட்சியம்’ ” 

ஒவ்வொருமாத இறுதி வாரத்திலும் நாங்கள் செத்துதான் போகிறோம். ஆனால் அடுத்த மாத முதல் வாரத்திலேயே உங்களது ஒரு அழைப்பு எங்களை உயிர்த்தெழ வைக்கிறது. ஆக, நாங்கள் ஒவ்வொரு மாதமும் உயிர்த்தெழுவதற்காகவே தற்கொலை செய்து கொள்கிறோம். உங்கள் அனைவருக்கும் என் அன்பையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன் 

ஐம்பதாவது இதழ் என்பதை நினைத்தாலே இனிக்கிறது.

எங்களை இதில் சங்கமிக்க வைத்ததன் மூலம் எங்கள் வாழ்வையும் பொருள்படுத்திய வைகறை அய்யாவை மிக்க மரியாதையோடும் நன்றியோடும் இந்தப் புள்ளியில் நினைத்துக் கொள்கிறேன்

இந்த நல்ல நேரத்தில் முத்தையா மற்றும் சந்திரசேகரன் இருவருக்கும் என் அன்பும் முத்தங்களும். தோழர் சரவணனைப் பற்றி தனியாகவே எழுத இருக்கிறேன். அவரன்றி காக்கையின் தொடர் பயணம் சாத்தியமேயில்லை. அவருக்கும் என் அன்பும் முத்தங்களும்.

எங்களை சகித்துக் கொண்டு அடித்துத் தருவது என்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும். அச்சக உரிமையாளருக்கும் அச்சுக் கோர்த்து வடிவைக்கும் தோழர்களுக்கும் என் அன்பும் முத்தங்களும்.
*************************************************************************************
காக்கை ஐம்பதாவது இதழைக் கொண்டாடும் இதே நேரத்தில் ’உயிர் எழுத்து’ நூறாவது இதழைக் கடந்து தனது பயணத்தைத் தொடர்கிறது. ஐம்பது இதழ்களைக் கொண்டு வருவதற்குள் எவ்வளவு சிரமப் பட்டோம் என்பதை உணர்ந்துள்ள எங்களுக்கு நூறு இதழ்களைக் கொண்டு வருவதற்கு சுதிர் என்ன பாடு பட்டிருப்பார் என்பதை உணர முடிகிறது.

உயிர் எழுத்து கண்டெடுத்துத் தந்த படைப்பாளிகளின் பட்டியல் மிக நீளமானது.

எந்தக் குழுவிலும் தன்னை அடைத்துக் கொள்ளாமலும் தற்செயலாகவேனும் தனக்கென்று ஒரு குழு அமைந்துவிடக் கூடாது என்பதிலும் சுதிர் காட்டும் அக்கறை எடுத்துக் கொள்ளத் தக்கது.

சமூகமும் கலாச்சாரமும் எல்லாத் திக்குகளிலிருந்தும் அச்சுறுத்தல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவற்றை எதிகொள்ள இன்னும் பலநூறு சிற்றிதழ்களின் தேவை இருக்கிறது.

அந்த வகையில் உயிர் எழுத்தின் வெற்றியை இந்தச் சமூகம் மகிழ்ந்து கொண்டாட வேண்டும். தனது தோழமையின் வெற்றியை காக்கை தனதாக உணர்ந்து காக்கை மகிழ்கிறது.

சொன்னால் யாரும் நம்புவார்களா என்று தெரியவில்லை. உயிர் எழுத்தில் என் பெயரைப் பார்த்துவிட வேண்டும் என்ற என் கனவின் வயது ஏழு ஆண்டு.

வலியுணர்ந்தவன் வாழ்த்துகிறேன் சுதிர்.






Sunday, November 29, 2015

தஞ்சை UNICEF பயிற்சி பட்டறை




நேற்று தஞ்சையில் UNICEF ஏற்பாடு செய்திருந்த குழந்தை நேயப்பள்ளி பட்டறையை தலைமையேற்று துவக்கி வைத்த போது.

அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் தம் மீதான மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் சம விருப்போடு அணுகும் ஆரோக்கியமான எதார்த்தம் மகிழ்வைத் தந்தது என்றால் அவர்களது கறாரான சுய மதிப்பீடு பொதுத் துவக்கக் கல்வியின் மீது நம்பிக்கையைத் தருகிறது

எதை கற்பிப்பது எப்படிக் கற்பிப்பது என்பதில் குழந்தைகளைப் போல் அவர்கள் காட்டிய ஆர்வம் நம்பிக்கையை உறுதி செய்தது.

போட்டி வைத்து அதிலொரு முதல்வனைத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் ஆசிரியர். ஒவ்வொரு பிள்ளையும் முதல் பரிசு வாங்க அவவனுக்கு என்ன போட்டிகள் வைக்கலாம் என்று நீங்கள் யோசிக்கத் தொடங்கினால் நீங்கள் குழந்தை நேய ஆசிரியர் என்று பேசிவிட்டு வந்தேன்.

இது நல்ல தொடக்கம்

தொடர்ந்து இவர்களோடு உழைத்தோமெனில் விரைவில் வகுப்பறை என்பது கற்றலுக்கானது மட்டுமே. நல்ல வகுப்பறையில் கற்பித்தல் இருக்காது என்பதை இவர்கள் சாத்தியமாக்குவார்கள்

இந்த வேலையில் யாரும் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் பிழியலாம்

3 வீட்டுப் பாடம்


 மாலை முழுதும் விளையாட்டா
அடேய் பாரதி….
வீட்டுப் பாடத்த
உங்க தாத்தாவா செய்வார்?”

என்று அந்தக் கவிஞர் வாசித்தபோது  சென்னை LLA அரங்கமே அதிர்ந்தது. தலைமை வகித்த கவிஞர் வண்ணை வளவன் எழுந்து ஓடி அந்தக் கவிஞரைக் கட்டிப் பிடித்து வாழ்த்தினார். இது நடந்து முப்பது ஆண்டுகளைக் கடந்து விட்ட படியால் எவ்வளவு முயன்றும் அந்தக் கவிஞரின் பெயரைக் கண்டடைய முடியவில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கல்வி இந்த அளவிற்கு வணிகப் பட்டும் இல்லை, இந்த அளவிற்கு இயந்திரத் தனமாகவும் மாறியிருக்கவுமில்லை. குழந்தைகளின் மாலை நேர விளையாட்டு முற்றாய்க் களவாடப் பட்டிருக்க வில்லை. அப்போதே இப்படிப் பாடினாரென்றால் இப்போது எப்படி பாடுவார் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

அப்போதெல்லாம் மூன்றாம் வகுப்புவரை கல்லு சிலேட்டும், சிலேட்டுக் குச்சியும் மட்டும்தான். நான் ஏழாம் வகுப்பு படிக்கிறபோதுதான் ரப்பர் சிலேட்டு என்று அழைக்கப் பட்ட அட்டை சிலேட்டு அறிமுகமானது. இது கல்லு சிலேட்டைவிட லேசானது. உடையாது, ஆனால் தண்ணீர் பட்டால் ஊறி வீணாகிவிடும். எங்களுக்கான கொடுப்பினை என்னவோ கல்லு சிலேட்டுதான். அது ஒரு மாதிரியான கருப்பு மாவினால் செய்யப் பட்டிருக்கும். விழுந்தால் உடைந்துவிடும். அதை மாற்றுவதற்குள் வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்து அடியெல்லாம் வாங்க வேண்டியிருக்கும்.

ஆக, எங்களது வீட்டுப் பாடம் என்பது சிலேட்டின் இரண்டுப் பக்கங்களுக்கு மேல் போகாது. ஏதேனும் தப்பு செய்துவிட்டால் திருத்துவது மிகவும் சுலபம். நாக்கை துறுத்தி வலது கை சுட்டு விரலால் ஒரு சொட்டு எச்சிலெடுத்து அழித்து அதன் மேலேயே திருத்தி விடுவோம். ஆனால் சிலேட்டில் எழுதிய வீட்டுப் பாட்த்தை அழிந்துவிடாமல் பாதுகாப்பாய் பள்ளிக்கு எடுத்துப் போவதுதான் அப்போதெல்லாம் சிரமம்.

நான் நான்காம் வகுப்பு படிக்கிறபோதுதான் சிலேட்டோடு நோட்டில் எழுதுவதற்கும் அனுமதிக்கப் பட்டேன். நோட்டென்றால் நாற்பது பக்க ரெண்டுகோடு நோட்டு ஒன்று, நாலுகோடு நோட்டு ஒன்று. அவ்வளவுதான். அதுவும் எழுதுவதற்கு பென்சில்தான். பேனாவெல்லாம் ஆறாம் வகுப்பில்தான்.

ஆறாம் வகுப்பிலும் ரஃப் நோட் உள்ளிட்டு அரை குயர் நோட்டுகள் ஒரு ஐந்தாறு தேறும், அவ்வளவுதான். அனைத்து புத்தகங்களையும் நோட்டுகளையும்கூட பள்ளிக்கு தினமும் எடுத்துப் போகத் தேவை இல்லை. அன்று என்னென்ன பாடங்கள் இருக்கிறதோ அவற்குரிய புத்தகங்களையும் நோட்டுக்களையும் மட்டும்  எடுத்துப் போனால் போதும். அதிலும் மதிய உணவிற்கு வீட்டிற்கு போக முடிந்தவர்கள் எனில் காலையில் உள்ள பாடங்களுக்கானவற்றை மட்டும் காலையிலும் மதியம் உள்ள பாடங்களுக்கான நோட்டுக்களையும் புத்தகங்களையும் மதியமும் எடுத்துப் போனால் போதுமானது. சொன்னால் ஆச்சரியமாக இருக்கும், நானெல்லாம் ஆறாம் வகுப்பிலிருந்து முதுகலை பட்ட வகுப்பு வரை புத்தகப் பையே எடுத்துப் போனதில்லை.

இன்றென்னடாவென்றால் பத்து கிலோ எடையுள்ள LKG குழந்தை பதினைந்து கிலோ புத்தக மூட்டையை முதுகில் சுமக்கிறாள். MA படிக்கும் மாணவன் ஒரே ஒரு நோட்டை எடுத்தபடி கல்லூரிக்குப் போகிறான். அதிலும் சிலர்  இரண்டு ஆண்டுகளையும் ஒரே நோட்டில் முடித்து விடுகிறார்கள்.

LKG குழந்தையிடம் புத்தக மூட்டையையும் MA படிக்கும் மாணவனிடம் ஒரே ஒரு நோட்டையும் கொடுத்திருக்கும் இன்றைய கல்வி முறையை என்ன செய்வது?

அம்சப்பிரியாபறத்தலை விரும்பும் பறவைகள்என்கிற தனது நூலில் கற்பனையான சம்பவமொன்றை சொல்வார்,

திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது பள்ளிக் குழந்தை ஒருத்தியைத் தவிர யாரும் அங்கில்லை. குழந்தைக்கு ஃபைவ் ஸ்டார் இரண்டைக் கொடுத்து ஏமாற்றிவிட்டு பொருட்களையும் நகைகளையும் மூட்டைக் கட்டிக் கொண்டு கிளம்புகிறார்கள். கிட்டத்தட்ட வீடே சுத்தம். வெளியேறிக் கொண்டிருந்தவர்களைஏய் திருட்டு அங்கிள்என்று குழந்தை அழைக்கவே ஒருக்கனம் அவர்கள் அப்படியே ஆடிப் போகிறார்கள். மிரட்சியோடு பார்த்தவர்களிடம் தனது புத்தக மூட்டையைக் காட்டிஎல்லாத்தையும் எடுத்துட்டு போறீங்களே, இத உங்க அப்பனா எடுத்துட்டுப் போவான்என்று கேட்டாளாம்.

பள்ளி தொடங்கும் நாட்களில் குழந்தைகளின் புது புத்தகப்பை கனவு என்பது எவ்வளவு அழகானது, அழுத்தமானது என்பதை உணர்ந்தவர்களுக்கு அந்தக் குழந்தையின் வலி சொல்லாமலேயே புரியும். அழுது ஆர்ப்பாட்டமெல்லாம் செய்து ஆசை ஆசையாய் வாங்கிய புத்தகப் பை அது. அந்தப் பையில் ஜிப்புகளின் எண்ணிக்கை அந்தக் குழந்தையின் கண்களை எப்படி ஜொலிக்க வைத்தது என்பது அருகிருந்து பார்த்தவர்களுக்குப் புரியும். கடையிலிருந்து வீட்டிற்கு வந்த்திலிருந்து அந்த ஜிப்புகளை இழுத்து மூடவும் பென்சில் டப்பாவை மூடி மூடித் திறக்கவுமாகவே அவற்றோடு ஒன்றிப் போகும் குழந்தைகள். ”பள்ளிக்கூடம் திறக்குறதுக்குள்ள இழுத்து இழுத்தே கிழிச்சுடுவ போலிருக்கேஎன்று அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே விடாது அதே வேலையை செய்து கொண்டுதானே இருந்திருப்பாள் அந்தக் குழந்தை.

மட்டுமா, கடை கடையாய் ஏறி பார்த்து பார்த்து வாங்கிய அழகான லேபிள்கள் ஒட்டி பக்கத்து வீட்டு அக்காவிடம் முத்து முத்து எழுத்துக்களால் தன் பெயரை எழுதி வாங்கிய புத்தகங்களையும்தான் ஏன் எடுத்துப் போகவில்லை என்று எரிச்சலோடு அந்தக் குழந்தை கேட்கிறாள் என்றால் அவளது எரிச்சலுக்கு காரணம் என்னவாக இருக்கும்?

காரணங்களை வரிசையாக ஒரு குயருக்கு பட்டியலிடலாம். ஆனால் களவுபோன குழந்தைகளின் மாலை நேரத்து விளையாட்டுக்கள், ஞாயிற்றுக் கிழமை உள்ளிட்டு எல்லா நாட்களிலும்ஓவர் டைம்பார்க்கும் ஒரு ஆலைத் தொழிலாளிக்கு ஏற்படும் உடல் அசதிக்கு சற்றும் குறையாத உடல் அசதி. இவற்றையே இதற்கான ஆகப் பெருங்காரணங்களாகக் கொள்ள வேண்டும்.

ஆலைத் தொழிலாளியாவது வீட்டிற்கு வந்ததும் ஓய்வு எடுக்கலாம். குழந்தைகளுக்கோ பள்ளி, பள்ளி முடிந்ததும் தனிப் பயிற்சி. இரண்டும் முடிந்து வீட்டிற்கு வந்தால் இரு புறத்திருந்தும் பெறப்பட்ட வீட்டுப் பாடங்கள். எல்லாம் முடிந்து படுக்கப் போனால் தூங்கவிடாமல் அடுத்த நாளுக்கான டெஸ்டுகளின் நினைவு வரிசையாய் வந்து தொந்தரவு செய்யும்.

வீட்டுப் பாடம் எழுத இரண்டுக் கைகள் போதாத காரணத்தால் முருகனிடம் உள்ள பன்னிரண்டு கைகளில் ஐந்தாறை ஒரு குழந்தை யாசித்து நிற்பது மாதிரி அதே நூலில் பிரிதொரு இடத்தில் அம்சப்பிரியா எழுதுவார். என்ன கொடுமையெனில் அழுதுக் கடக்க வேண்டிய அந்தப் பகுதியை நகைச்சுவையாகப் பார்த்து சிரித்துக் கடக்கிறோம்.  

எட்டுமணிநேர உழைப்பு, எட்டுமணிநேர ஓய்வு, எட்டுமணிநேர உறக்கம் என்கிற உழைப்பாளிக்கான கணக்கை நாம் பள்ளிக் குழந்தைகளிடம் நீட்டுகிறோமா? உண்மையைச் சொல்வதெனில் நாம் தொழிலாளர்களை விடவும் பேரதிகமாய் குழந்தைகளை கசக்கிச் சுரண்டுகிறோம்.

நான்கு மணிக்கெல்லாம் குழந்தைகளை எழுப்பி விடுகிறோம். காலைக் கடன்களை முடித்து பல் துலக்கி நான்கரை அல்லது நாலே முக்காலுக்குள் படிக்க அமர்ந்து விட வேண்டும். ஆறரை மணி வரை இது நீளும். பிறகு குளியல், சாப்பாடு என்பதையெல்லாம் ஏழு மணிக்குள் முடித்துவிட வேண்டும். ஏழரை மணிக்கு வேனேறிவிட வேண்டும். எட்டரை மணியிலிருந்து பள்ளியில் சிறப்பு வகுப்பு. இது ஒன்பது இருபத்தி ஐந்துவரை நடக்கும். ஒன்பது முப்பதுக்கு கூட்டு பிரார்த்தனை வழிபாடு. இடைபட்ட ஐந்து நிமிடங்களில் குழந்தைகள் வரிசையாய் நின்று வழிபாட்டுத் திடலுக்கு போக வேண்டும். பிறகு வகுப்புகள், பாடங்கள், தண்டனைகள், டெஸ்டுகள்.

ஒரு வழியாய் நான்கரை மணிக்கு பள்ளி விடும். முன்பெல்லாம் பள்ளி விட்டதும் குழந்தைகளின் எழும் குழந்தைகளின் கூச்சல் அவ்வளவு இனிமையாக இருக்கும். இப்போதெல்லாம் அந்த நேரத்திலும் மயான அமைதியாகவே இருக்கின்றன பள்ளிகள். காரணம் நான்கரைக்கு பள்ளி முடிந்தாலும் நான்கே முக்காலுக்கெல்லாம் ஸ்டடி தொடங்கி விடும். இந்தக் கால் மணி நேரத்திற்குள் அத்துனைக் குழந்தைகளும் பள்ளிகளில் உள்ள குறைந்த அளவிலான கழிவறைகளைப் பயன்படுத்தி ஆசுவாசப் படுத்திக் கொண்டு வந்துவிட வேண்டும். ஸ்டடி பெரும்பாலும் மைதானத்தில்தான். வரிசையாய் தரையில் அமர்ந்து ஐந்தரை வரைக்கும் படிக்க வேண்டும். பிறகு வீடு. ஆறரைக்கெல்லாம் தனிப் பயிற்சிக்குப் போக வேண்டும். ஏட்டரை மணிக்கு தனிப் பயிற்சி முடியும். ஒன்பது மணி வாக்கில் வீடு திரும்பியபின் முகம் கழுவி சாப்பிட்டு ஒன்பதரைக்கு உட்கார்ந்து வீட்டுப் பாடங்களை முடிக்க வேண்டும். பிறகு அடுத்தநாள் டெஸ்ட்டிற்கு தாயார் செய்ய வேண்டும். இப்படியாக ஒரு குழந்தை படிக்கப் போகும்போது மணி பதினொன்று முப்பது அல்லது சில நேரம் பன்னிரண்டுகூட ஆகும்.

ஆக, ஒரு பள்ளிக் குழந்தை சராசரியாக ஐந்துமணி நேரமே தூங்குவதற்கு அனுமதிக்கப் படுகிறான்வருடம் முழுவதும் ஓய்வற்று உழைக்கிறான்.

பள்ளிப் பாடங்களில் ஏற்படும் சிக்கலைத் தீர்ப்பதற்காகத்தான் தனிப் பயிற்சி என்ற ஒன்றே தோன்றியிருக்க வேண்டும். ஆனால், இப்போது குழந்தைகளுக்கு இரண்டு பள்ளிகள் என்ற அளவிலானாது நடைமுறை. அவர்களும் வீட்டுப் பாடம் தருகிறார்கள், இவர்களும் வீட்டுப் பாடம் தருகிறார்கள். அவர்களும் டெஸ்ட் வைக்கிறார்கள், இவர்களும் டெஸ்ட் வைக்கிறார்கள். அவர்களும் தண்டிக்கிறார்கள், இவர்களும் தண்டிக்கிறார்கள். இரட்டைச் சுமையாகிப் போனது குழந்தைகளுக்கு.

காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை என்பதெல்லாம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டம் வகுப்பு குழந்தைகளுக்கு கிடையாது. முழு ஆண்டு விடுமுறை என்பது ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு கிடையாது. முழு ஆண்டு விடுமுறையில் அவர்களுக்கு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடங்கள் ஆரம்பமாகிவிடும்.

கேட்டால் குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காகத்தானே இவ்வளவும் செய்கிறோம் என்கிறார்கள்.            

1)   இப்படி கசங்கி பிழியப்படும் குழந்தைகள் சிறுவயதிலேயே கிழடு தட்டி தளர்ந்து போவார்கள் என்று அக்கறையுள்ள சான்றோர்கள் கத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
2)   உச்சமாக, இதுமாதிரி வதைபடும் குழந்தைகள் சைக்கோவாக மாற வாய்ப்புகளுண்டு என்பதையும் சமூக அறிஞர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
3)   இந்த பிரபஞ்சத்தை இந்த அளவிற்கு முன்னேற்றிய யாரும் இது மாதிரி கசக்கிப் பிழியப் படாதவர்களே என்கிற உண்மையையும், எனவே இதுமாதிரி கசக்கிப் பிழியாமலே குழந்தைகளை மனிதம் கசியும் சான்றோர்களாக்க முடியும் என்பதை நாமும் சந்து கிடைக்கும் இடங்களிலெல்லாம் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறோம்.

கிஷோரை சாதாரன தமிழ்வழி பொதுப் பள்ளியில்தான் படிக்க வைத்தேன். இவ்வளவு சுமை அவனுக்கு இல்லை. ஆனாலும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த அன்று சீருடையை கழட்டிப் போட்டபடியே சொன்னான், “அப்பாடா , ஒரு வாரம் நிம்மதியாத் தூங்கனும்”. ‘ஏண்டா தம்பி இப்படி நொந்துக்கற?”

கட்டிலில் விழப் போனவன் சொன்னான்,

பள்ளிக்கூடத்துல சேர்த்ததுக்கு பேசாம வெசத்த வச்சு கொன்னிருக்கலாம்

உண்மையை சொல்கிறேன், செத்தே போகலாம் என்றிருந்தது எனக்கு.

மூன்று சொல்லி முடிக்கலாம்,

1)   இந்த அளவிற்கு வதைகூடங்களாக மாறிப் போகாத பொதுப்பள்ளிக் கட்டுமானத்தை பாதுகாத்து வளர்த்தெடுப்பது.

2)   கல்வி நிலையங்களை வெடிப்புகளாலும், சிரிப்புகளாலும் கசியும் பள்ளிகளாக மாற்றுவது
3)   வீட்டுப் பாடங்களை அறவே ஒழிப்பது
4)   நீதி போதனை, விளையாட்டு, ஆடல், பாடல், பேச்சு, ரசனை, போன்ற வாழ்க்கையோடு தொடர்புடைய அனைத்தும் கிடைக்கும் இடமாக பள்ளிகளை மாற்றுவது.

முடியாது போனால்,

கல்வித்துறை அதிகாரிகள், ஊழல் அரசியல்வாதிகள், கல்வித் தந்தைகள், ஆகியோரை இரண்டு ஆண்டுகள் பள்ளிக்குப் போய் படிக்கச் செய்வது.

09.10.15 தினமணி இணைய இதழ்


Saturday, November 28, 2015

கவிதை 38

அழகானது
ரகசியமான 
காமம் 
பேரழகானது
காமத்தின் ரகசியம் 

கடிதம் 11

அன்பின் நண்பர்களே,
வணக்கம்.
தஞ்சை ஹோட்டல் பரிசுத்தம்  கூட்ட அரங்கில் இன்று காலை 10 மணிக்கு “UNISEF"  திருச்சி மண்டலத்திலிருந்து  (8 மாவட்டங்கள்) தேர்ந்தெடுக்கப் பட்ட எழுபது ஆசிரியர்களுக்கான ‘குழந்தை மையக் கல்வி’ குறித்தான பயிற்சியில் அவர்களோடு உரையாட செல்கிறேன்.

Friday, November 27, 2015

ரசனை 14

குளமோ ஏரியோ இல்லை. அது ஒரு சின்னப் பள்ளம். ஒன்றரைக் குடம் தண்ணீர் கிடக்கிறது. அதிலொரு வாத்து தாகம் தணிக்கிறது. இதைப் பார்த்த தம்பி நாணல்- கலை இலக்கியப் பெருமன்றம்எழுதுகிறான்,
"உன்னை
முழுதும் குடித்து விட்டால்
எனது பிம்பம் அழிந்துவிடும்தானே"
வாத்துகூட பிம்பத்திற்கு அலைகிறதாம் .
என்ன ஒரு அழகான பகடி.
இப்படி ஒரு அழகான கவிதைக்கு காரணமான அந்தப் பள்ளமும் , வாத்தும் அந்தப் பள்ளத்தில் நீர் சேர்த்த மழையும் நம் நன்றிக்குரியன.
ரொம்பப் பெருசா வருவ நாணல்.

கவிதை 37

எனக்கு அடுத்ததற்கும் அடுத்ததாய் 
பேருந்தில் அமர்ந்தபடி 
முகநூல் பார்த்துக் கொண்டிருக்கும் 
அந்த 
வெள்ளைச் சட்டைத் தோழருக்கானதாகக் கூட இருக்கலாம் 
நான்
முகநூலில் தட்டிக் கொண்டிருக்கும்
இந்த பிறந்தநாள் வாழ்த்து

Thursday, November 26, 2015

கடிதம் 10

அன்பின் தோழர்களே,
வணக்கம். நலம்தானே?
ஒருமாதமாக வலைப் பக்கமே வர இயலவில்லை. முகநூலும் ஏறத்தாழ அப்படியே. ஆனாலும் முகந்ந்லைப் பொறுத்தவரை பயணங்களில்கூட அலை பேசி மூலமாகவே இயங்க முடியும் என்பதால் அங்கே கொஞ்சம் இயங்க முடிந்தது.

எப்படி இருக்கீங்க?

தலைமை ஆசிரியர் ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் இருந்ததால் பணிச்சுமை அதிகமாகிவிட்டது.

இனி அனைவரது ஆக்கங்களையும் வாசித்து பேசுவேன்.

மிக்க நன்றி.

2 ஒரே ஒரு மாணவனுக்காகவும்


 ஒரே ஒரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு அதிகாரிகள் வாக்காளருக்காக காத்துக் கிடந்தனர்என்ற செய்தியை 30.04.2006 அன்று தீக்கதிரில் பார்த்ததிலிருந்து இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்யும் இந்தப் புள்ளிவரை அது கொடுத்த அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலுமிருந்து மீளாதாவனாகவே இருக்கிறேன்.

ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடியா? அதுவும் இந்தியாவிலா? ஒரே ஒரு வாக்காளருக்காக ஆறேழு வாக்குச் சாவடி அதிகாரிகளும், ஐந்தாறு கிராமப் பஞ்சாயத்து பணியாளர்களும், மூன்று காவலர்களும் பணியில் காத்துக் கிடந்தனரா? ஒரே ஒரு வாக்காளருக்காக வாக்குச் சீட்டு, படிவங்கள், வாக்காளர் பட்டியல் முறையாகத் தயாரிக்கப்பட்டதா?

இவையெல்லாம் சாத்தியமா? இதுகூட நடக்குமா? அதுவும் இந்தியாவில்.

சாத்தியப் பட்டிருக்கிறது.

எனில், ஏதோ ஒரு பெரும்புள்ளிக்காக இது நிகழ்ந்திருக்கும். ஏனெனில் இந்திய ஜனநாயகம் இத்தகைய முக்கியப் புள்ளிகளுக்காக எந்த அளவிற்கும் வளையும், ஒடியும் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் நடந்தது வேறு.

அதை நடத்திக் காட்டியவர் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சாமானியர். அதுவும் அன்றாடம் வயிற்றுப் பாட்டிற்காக மாடுகளை மேய்த்துப் பிழைக்கும் ஒரு ஏழைத் தொழிலாளி.

அடிமை என்று பொருள்படும்தாசன்என்ற பெயரைக் கொண்ட ஒரு எளிய மனிதன்தான் இப்படி ஒரு ஆச்சரியத்தை நடத்திக் காட்டியவர்.

நடந்தது இதுதான்,

கேரளாவில் கோட்டயத்தை அடுத்து பசுமையாய் புரண்டுப் படுத்திருக்கிறதுபம்பாடிஎன்கிற மலைக் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ளசரங்காட்டு எஸ்டேட்என்ற இடத்தில்தான் தாசன் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரோடு சேர்ந்து ஏறத்தாழ 350 எஸ்டேட் ஊழியர்களும் அந்த எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்தனர். ஏதோ காரணங்களால் இவரைத் தவிர மற்ற அனைவரும் எஸ்டேட்டை காலி செய்துவிட்டு பிழைப்பு காரணமாக வேறு வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்கின்றனர்.

அந்த இடம்பெரம்பாசட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வருகிறது. தாசன் உள்ளிட்ட வாக்காளர்களுக்காக அந்தப் பகுதியில் வழக்கமாக ஒரு வாக்குச் சாவடி அமைக்கப் பட்டு வந்திருக்கிறது. இப்போது தாசனைத் தவிர அனைவரும் புலம் பெயர்ந்து இடத்தைக் காலி செய்துவிட்டு நகர்ந்து விட்ட காரணத்தினால் தாசன் மட்டுமே அந்தப் பகுதியில் எஞ்சி நின்ற ஒரே ஒரு வாக்காளராகிறார்.

எஞ்சியுள்ள ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடியை அமைப்பது தேவையற்ற நிறைய பொருட்செலவை, தேவையற்ற பணிச்செலவை ஏற்படுத்தும் என்பதை உணர்கிறது தேர்தல் ஆணையம். எனவே தாசனது பெயரினை பக்கத்திலுள்ள வாக்குச் சாவடிக்கு நகர்த்துகிறது. அடுத்த வாக்குச் சாவடி தாசன் குடியிருப்பிலிருந்து 15 கிலோமீட்டர் தாண்டி இருக்கிறது.

இதை அறிந்ததும் கொதித்துப் போகிறார் தாசன். விலை மதிப்பு மிக்க ஒரு வாக்கினை தேர்தல் ஆணையம் அலட்சியப் படுத்திவிட்டதாகவே அவர் அதை உணர்கிறார். எனவே தான் வசிக்கும் பகுதியிலேயே ஒரு வாக்குச் சாவடி ஏற்படுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் தேர்தல் ஆணையத்திடம் வைக்கிறார்.

அவரது கோரிக்கையை அவரது ஏழ்மையைக் கருதி அலட்சியப் படுத்தவே தேர்தல் ஆணையம் முயன்றிருக்கும். ஆனால் அவர் விடுவதாக இல்லை. தனது கோரிக்கையில் வலுவாக இருக்கிறார்.

ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடியா?” தேர்தல் ஆணையம் கேட்டது.

எத்தனை பேர் என்பது பற்றியெல்லாம் தனக்கு சொல்வதற்கு கருத்து எதுவும் இல்லை என்றும் தான் வாக்களிக்க வேண்டியது தனது ஜனநாயகக் கடமை என்றும் கூறுகிறார். தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற ஏற்பாடுகளை செய்து தரவேண்டிய கடமை சட்டப்படி ஆணையத்திற்கு உள்ளது என்பதையும் தெளிவு படுத்தினார். ஆகவே வழக்கமாக தான் வாக்களித்துவரும் வாக்குச் சாவடியை இந்த மூறையும் ஆணையம் அமைத்துத் தர வேண்டும் என்றும் கோருகிறார்.

மிரட்டிப் பார்த்திருக்கும்தான் ஆணையம். ஆனால் அவர் அதற்கெல்லாம் மசிபவராகத் தெரியவில்லை. அடுத்ததாக என்ன நிகழ்ந்திருக்கும் என்பதையும் நம்மால் பெருமளவு யூகிக்க முடியும். மிரட்டல் எடுபடாது என்று தெரிந்துவிட்டால் பணிந்து வளைக்கப் பார்க்கும். ஆணையம் அதை செய்திருக்கவும் கூடும்.

வாகன வசதியை ஏற்பாடு செய்து தருவதாகவும், வந்தவுடன் காத்திருக்க வைக்காமல் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் கெஞ்சியிருக்கவும் கூடும்.

எதற்கும் மசியாத தாசன் தான் ஒரு வாக்காளன் என்ற வகையில் வாக்களிப்பது தனது ஜனநாயகக் கடமை என்கிறார். ஒரு வாக்காளன் தனது ஜனநாயக்க் கடமையை ஆற்றுவதற்கு வசதியாக அவன் வசிப்பிடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திற்குள் வாக்குச் சாவடியை அமைத்துத் தர வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதைத் தெளிவு படுத்துகிறார். ஒருக்கால் அதைச் செய்யாமல் தன்னை ஆணையம் அலைகழிக்குமானால் தன்னை வாக்களிக்க விடாமல் தடுத்துவிட்டதாக தான் வழக்குத் தொடுக்க இருப்பதாகவும் தன் நிலையை எந்த வித சமரசமுமின்றி தெளிவு படுத்திவிட்டார் தாசன்.        

வேறு வழியே இன்றி அந்த மாடு மேய்க்கும் ஏழை மனிதனின் கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்.

ஒரே ஒரு வாக்காளருக்காக அமைக்கப் பட்ட வாக்குச் சாவடியோடு 29.04.2006 விடிகிறது.

மூன்று மணிவரைக்கும் தாசன் வாக்களிக்க வராததால் அவரை அணுகி அழைத்திருக்கிறார்கள். தான் ஒன்றும் வேலை வெட்டி இல்லாமல் சும்மா இல்லை என்றும் மாடு மேய்த்துவிட்டு வாக்களிக்க வருவதாகவும் சொல்லியனுப்பி இருக்கிறார்.

காத்திருந்த அதிகாரிகள் காத்துக் கொண்டேதான் இருந்தனர்என்பதாக தீக்கதிர் எழுதுவதிலிருந்து அவர் வாக்களிக்கவே இல்லை என்றும் தோன்றுகிறது. ஆக நம் யூகம் உண்மை எனில் வாக்களிக்கவே வராத ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடி அமைக்கப் பட்டிருக்கிறது.

இது மெத்தவும் சரி.

நமது கவலை எல்லாம் ஒரே ஒரு வாக்காளருக்காக வாக்குச் சாவடி அமைத்த நாட்டில் போதிய அளவு மாணவர்கள் இல்லை என்ற காரணத்திற்காக பள்ளிகளை இழுத்து மூடும் அவலம் குறித்துதான்.

ஒன்றுஎட்டு அறிக்கை (ONE EIGHT PARTICULARS) என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆசிரியர்களில் பலருக்கு அடி வயிறு கலங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதியன்று ஒவ்வொரு பள்ளியும் தமது பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரத்தை
உரிய கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். இந்த விவர அறிக்கைக்குதான் ONE EIGHT PARTICULARS என்று பெயர்.

மாணவர் குறைந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் படும் வேதனை இருக்கிறதேஅப்பப்பா .. அதை சொல்லி மாளாது. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கல்வித்துறை கவலைப் படுவதில்லை.ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வார வாக்கில் அவர்களுக்கு நிரவல் என்ற முறையில் பணி மாறுதல் வழங்கப் படும். இதுவும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் எனில் இது நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் இந்த மாறுதல் ஆணை வழங்கப்படும்.

வருடத்தின் மத்தியில் அல்லது வருடத்தின் இறுதியில் இப்படி மாறுதல்கள் வருமானால் அந்த ஆசிரியர்கள் என்ன பாடு பட வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களில் நோயாளிகளாக உள்ளவர்களை திடுமென புலம்பெயர்த்துவது என்பது எவ்வளவு கடினம். போக, ஆசிரியர்களும் பெற்றோர்கள் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்?

பணி மாறுதல் பெற்றுள்ள ஆசிரியர்களின் குழந்தைகளின் கல்வி என்னாவது?
இடையில் அவர்களை எப்படி இடம் மாற்றுவது? ஒருக்கால் அப்படி பணி மாறுதல் பெறும் ஆசிரியரின் குழந்தை பத்தாம் வகுப்பிலோ அல்லது பன்னிரெண்டாம் வகுப்பிலோ படிப்பதாக வைத்துக் கொள்வோம். அவனது கல்வி என்னாகும். பாதி வருடத்தில் வேறு பள்ளிக்கு புலம் பெயரும் போது படித்த பள்ளி நண்பர்களை ஆசிரியர்களை  சூழலை பிரிந்து போகிற சோகம் ஒரு குழந்தையை என்ன பாடு படுத்தும்? அது போக புதிய இட்த்தில் அவன் வேறூன்றி இயல்பாக எவ்வளவு காலம் பிடிக்கும்? இது அவன் எழுதப் போகும் அரசுத் தேர்வை பாதிக்காதா? அல்லது ஆசிரியர் பிள்ளைகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்ற எண்ணமா?

மட்டுமல்ல ஒரு ஆசிரியர் இடையில் இப்படி மாறுதலில் இடம் பெயர்ந்தால் அது அவர் விட்டுப் போகும் பள்ளிக் குழந்தைகளையும் அவர் பணியேற்கச் செல்லும் பள்ளியின் குழந்தைகளையும் ஒருசேர பாதிக்காதா?

யார் வந்து விசைப் பொத்தானை அழுத்தினாலும் இயங்க இது ஒன்றும் மின் இயந்திரங்கள் அல்ல. இவை ரத்தமும் சதையுமாய் உயிர்த்தியங்கும் குழந்தைகள் ஜீவிக்கும் வகுப்பறைகள். தங்கள் ஆசிரியர் பிரிந்தால் அடுத்த நாளே அடுத்த ஆசிரியருக்காக காத்திருக்கும் இயந்திரங்கள் அல்ல. ஈரம் சுரக்கும் பிஞ்சுக் குழந்தைகள் அவர்கள். பிரிவுச் சோகம் ஒரு புறம், புதிதாய் வரும் ஆசிரியரோடு மனம் ஒத்துப் போகத் தேவைப்படும் கால அவகாசம் எல்லாமுமாக சேர்த்து அரசுத் தேர்வெழுதக் காத்திருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்காதா?

ஏதேது பற்றியோ யோசிக்கும் கல்வித்துறை இது குறித்து யோசிக்காதா? அல்லது அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஒடுக்கப் பட்ட ஏழைத் திரளின் குழந்தைகள்தானே, எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்ற அலட்சியமா?

அரசு பள்ளிகளுக்கு குழந்தைகள் வருவதில்லை என்பது ஒரு அரசை வேதனைப்பட வைக்க வேண்டும். எப்படிக் குழந்தைகளை கொண்டு வருவது என்று யோசிக்க வைக்க வேண்டும். சலுகைகளை வாரி இறைத்தேனும் பிள்ளைகளை தனது பள்ளிகளில் கொண்டுவந்து குவிக்க வேண்டும் அரசு. ஆயிரம் இடையூறுகளைக் கொண்டு வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.
என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எது காரணம் கொண்டும் பள்ளிகளை மூடக் கூடாது. ஒரே ஒரு மாணவன் இருப்பினும் அவனுக்காக பள்ளி இயங்க வேண்டும். மாணவனே இல்லை என்றாலும் பள்ளி திறந்திருக்க வேண்டும். அந்தப் பள்ளிகளுக்கு குழந்தைகளைக் கொண்டுவர வேண்டிய பொறுப்பை அரசு தன் தோள்களின்மீது மகிழ்ந்து சுமக்க வேணும்.

மீண்டும் ஒன்றைச் சொல்வோம்,

ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடி சாத்தியமெனில் ஒரே ஒரு மாணவனுக்காக ஒரு பள்ளியும் சாத்தியமே.


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...