Saturday, November 26, 2011

கோடொன்று பெரிதாய் ...

வழக்கமாக மொட்டை மாடியை நான்கைந்து சுற்றுகள் முடிக்கும் முன்னரே மறந்து போன விஷயம் ஞாபகத்துக்கு வந்து விடும். ஆனால் இன்று கால் வலிக்குமளவுக்கு மொட்டை மாடியில் நடந்து பார்த்தும் நினைவுக்கு வரவில்லை.

இதுவும் ஒன்றும் புதிதல்லதான். மொட்டை மாடியில் கிடைக்காமல் போனால் காலார கடைவீதி நடந்து போய் கலியன் கடையில் ஒரு கோப்பை தேனீர் குடித்து விட்டு திரும்புவது வழக்கம். வீட்டிலிருந்து கலியன் கடைக்கும், கலியன் கடையிலிருந்து வீட்டிற்குமான நடை வெளியில் மறந்து போன விஷயம் ஞாபகத்தில் தட்டுப் பட்டு விடும்.

நான்குமுறை கலியன் கடைக்கு நடந்தும் பலன் கிடைக்க வில்லை. எவ்வளவோ முயற்சி செய்தபோதும் எதுவுமே நினைவுக்கு வரவில்லை என்பதில் கூட ஆபத்து எதுவும் இல்லை. நமக்குக் கொடுத்தவனே மறந்து போயிருந்த கடன் பற்றிய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகத்திற்கு வரவே கலியன் கடைக்கான ஐந்தாவது பயணத்தை மிகுந்த புத்திசாலித் தனத்தோடு தவிர்த்தேன்.

அந்த மன்னனின் பெயரும், அந்த சம்பவம் நடந்த இடமும், அதை நான் எங்கு வாசித்தேன் என்பதும்தான் நான் மறந்துபோன சமாச்சாரங்கள்.

வெகுநேர யோசனைக்குப் பின் அவை எல்லாம் நினைவுக்கு வர மறுத்தாலும் அதை எழுதியே விடுவது என்று முடிவெடுத்தேன். இல்லாது போனால் இவ்வளவு பெரிய அபத்தத்திற்கான அடிக்கல் நாட்டப் படுவதைப் பார்த்தும் அசையாது வேடிக்கை பார்த்த குற்றத்திற்கு என்னை ஆளாக்கி, வருங்காலத் தலைமுறையினர் என் கல்லறையின் முகவரியை கஷ்டப்பட்டேனும் கண்டுபித்து வந்து காறி உமிழ்ந்துவிடுவார்கள்.

மேற்சொன்ன விவரங்கள் இல்லாது எழுதுவதால் சிலர் இதை புனைவாகக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் ஒன்றும் பெரிய பாதிப்பில்லை.

அந்த மன்னனின் பெயர் அநேகமாக தைமூர்.அந்த சம்பவம் நிகழ்ந்த இடம் அநேகமாக பாக்தாத். இவை பிழை எனும் பட்சத்தில் யாரும் என் மீது கோபப் படாமல் இதை ஒரு புனைவாகவே கொள்ளுமாறும் வேண்டுகிறேன். இது புனைவாகவே இருந்தாலும் சரியாகவே இங்கு பொருந்தும் என்பதை மட்டும் உறுதியாய் சொல்கிறேன்.

மிகுந்த கனவுகளோடும் , அதைவிட அதிக சிரமத்தோடும் பாக்தாத்தை வெற்றி கொள்கிறான் தைமூர்.

பொதுவாகாவே இத்தகைய வெற்றிகள் நிகழும் நேரங்களில் எல்லாம் அந்த மண்ணின் அழகான யுவதிகளை,  நன்கு உழைப்பதற்கான கட்டுலடோடு உள்ள இளைஞர்களை, பொன்னை, பொருளை, யானைகளை ,குதிரைகளை, மற்றும் பயன்படக் கூடிய கால்நடைகளை அள்ளிச் செல்வதோடு அந்த மண்ணில் இருக்கும் கலைப் பொக்கிஷங்களை, மற்ற மதத்து வழிபாட்டு புனிதத் தளங்களை, இன்ன பிற மேன்மைகளை மிச்சம் வைக்காது அழித்தும் போவார்கள்.

வெற்றிக்குப் பிறகு மன்னனைச் சந்திக்கிறான் தளபதி.

“இந்த நிமிடம் முதல் இந்த மண்ணும் மக்களும் உமது அடிமைகள் மன்னா”

“அப்படியா. மகிழ்ச்சி”

” இந்த அடிமை மண்ணில் எதை முதலில் அழிக்க வேண்டும் என உத்தரவு மன்னா?”

மன்னன் மௌனமாய் இருக்கவே

“இங்குள்ள கோட்டையை தகர்த்துவிடவா மன்னா?”

“ வேண்டாம் அது இருப்பதால் நமக்கென்ன பாதிப்பு?”

” அரண்மனை?”

“வேண்டாம் வேண்டாம் இருந்துவிட்டுப் போகட்டும்”

“புராதனக் கட்டிடங்களை?”

“ வேண்டாம் முட்டாளே”

“அணைகளை...?”

“ நாசமாப் போறவனே. உருவாக்கத்தான் தெரியவில்லை. எதை அழிப்பது என்று கூடவா உனக்குத் தெரியாது?”

மிரண்டு போன தளபதி “ வேறு எதைத் தான் மன்னா அழிப்பது?”

“ இந்த மண்ணில் இருக்கும் அத்துனை நூலகங்களையும் அழித்துப் போடு. ஒரு துண்டுத் தாள், எழுது பொருள் , புத்தகம், சிலேட்டு, செப்பேடு, கல்வெட்டு, ஓலைச் சுவடி என்று எதுவும் மிச்சம் இருக்கக் கூடாது. எது இருந்தாலும் அழித்துப் போடு.”

இதைக் கேட்டதும் தளபதிக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆனாலும் தன் கழுத்தில் தலை இருக்க வேண்டுமே என்ற பயத்தில் மிகவும் சிரமப் பட்டு சிரிப்பை அடக்கினான். ஆனாலும் அடக்கவே முடியாத ஆர்வத்தில் கேட்டே விட்டான்.

“இவற்றை அழிப்பதால் என்ன மன்னா லாபம்?”

பலம் கொண்டமட்டும் மன்னன் சிரித்து வைத்தான். “மண்டு மண்டு. இவை எல்லாம் இருந்தால் நமது அடிமைகள் வாசிக்க மாட்டார்களா?”

“ வாசிப்பார்கள்தான் மன்னா. ஆனால் அதனால் நமக்கென்ன பாதிப்பு?”

” வாசித்தால் அவனுக்கு அறிவு வராதா?”

“ வரும்தான் மன்னா. அவனுக்கு அறிவு வருவதால் நமக்கென்ன மன்னா?”

“ மடையா!, அறிவு தெளிவைத் தரும். அது,  தான் அடிமை என்பதை அவனுக்கு உணர்த்தும். விடுதலை வேட்கையை அவனுக்குத் தரும். அது நமக்கு ஆபத்தாக முடியும். ஒருவன் அடிமையாகவே இருக்க வேண்டுமெனில் அவனை வாசிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாசிக்க ஆரம்பித்துவிட்டால் அவன் விடுதலையைத் தேடத் தொடங்கிவிடுவான்.”

( தாள்கள் அறிவைத் தரும். அறிவு விடுதலைக்கான வேட்கையைத் தரும் என்பது உண்மை எனும் பட்சத்தில் “ தாள்களே இல்லாத உலகமே எனது கனவு” என்று உரக்கக் கூவி உலகம் பூராவும் கிளைகள் பரப்பி செயல் படும் பில் கேட்ஸிடமும் மிகுந்த எச்சரிக்கையோடுதான் இருக்க வேண்டும் போல.)

“ஆஹா! ஆஹா!, மன்னர்னா மன்னர்தான்”

( எந்த மன்னனிடம் ஒரு தளபதி இவ்வளவு பொறுமையாகப் பேசியிருக்க முடியும் என்று யாரும் கிண்டலிக்க வேண்டாம். புனைவு கலந்தது என்று அருள் கூர்ந்து கொள்ளுங்கள்.)

இதை ஞாபகத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை மாற்றப் போவதாக முதல்வர் அறிவித்த அறிவிப்புதான் நம் நினைவிற்கு இந்த சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

இரண்டிற்கும் பெரியதாய் ஏதும் வித்தியாசம் இருப்பதாகப் படவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க அரசு செய்த ஒரே நல்ல காரியமாக இதைமட்டும்தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. இதை இவ்வளவு செய் நேர்த்தியுடன் இவ்வளவு அக்கறையோடு எப்படி செய்தார்கள் என்பதுதான் நம்மால் இன்னும் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது.

இதை மாற்றுவதற்கு நீங்கள் சொல்லும் எந்த ஒரு காரணமும் ஏற்கத் தக்கதாய் இல்லையே முதல்வர் அவர்களே.

அது முழுக்க முழுக்க நூலக ஆணைக் குழுவின் நிதியிலிருந்து கட்டப் பட்டது எனவே அதை வேறு காரியங்களுக்கு பயன் படுத்த இயலாது என்று த.மு.எ.க.ச போட்டிருக்கும் வழக்கில் நூறு விழுக்காடும் நியாயம் இருப்பதாகவே படுகிறது.

மேலும் நூலக ஆணைக் குழு அதை தங்களால் நிர்வாகிக்க இயலாது என்றும் சொல்லாத நிலையில் அதை நீங்கள் மாற்றப் போவதாய் அறிவித்திருப்பது நியாயமாயில்லையே என்ற அவர்களது குரலிலும் நியாயம் தானே நிரம்பி வழிகிறது முதல்வர் அவர்களே.

குழந்தைகளுக்கான மருத்துவமனை என்று நீங்கள் சொல்வதையும் , “ எவ்வளவோ இடம் இருக்கே. அம்மா நினைத்தால் ஒரே வருடத்தில் இதை விட பெரிய , அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளை எல்லா மாவட்டத் தலை நகரங்களிலும் ஏற்படுத்த முடியும்,” என்று மூன்றாம் வகுப்பு குழந்தையே நியாயமாய் நிராகரிக்கிறானே.

அந்த சின்னக் குழந்தைக்கே புரிவது உங்களுக்கு புரியாமலா இருக்கும். பிறகு ஏன் தாயே?

அதுவும் அந்தச் சின்னக் குழந்தைக்கே புரியக் கூடிய விஷயம்தான்.

அது கலைஞரால் அமைக்கப் பெற்றது. அது இருக்கும் வரைக்கும் கலைஞரின் பெயர் இருக்கும். அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இல்லை என்பதுதானே.

இல்லை என்று சொல்லிவிடாதீர்கள் முதல்வர் அவர்களே. பிறகு தைமூர் பாக்தாத் மக்கள் அடிமைகளாகவே இருக்க நினைத்ததைப் போல் நீங்கள் எங்களை அடிமைகளாகவே வைத்திருக்க முடிவெடுத்துவிட்டீர்கள் என்று ஆகிவிடும்.

தமிழர்கள் அறிவற்று அடிமைகளாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப் படுவதாகத் தெரியவில்லை. எனில், கலைஞருக்கு பெயர் போகிறதே என்ற ஆதங்கமாகத்தான் இருக்கும்.

இது எட்டு ஏக்கர் நிலப் பரப்பில், எட்டுத் தளங்களில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப் பெரிய நூலகம், அவ்வளவுதான்.

நீங்கள் நினைத்தால் பத்து ஏக்கர் நிலப் பரப்பில், பன்னிரண்டு தளங்களைக் கொண்டு, இதைவிட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உலகின் ஆகப் பெரிய நூலகத்தை உங்களால் உருவாக்க இயலும்.

கலைஞர் ஒரு கோடு போட்டிருக்கிறார். அது பெரியதாய் உங்கள் கண்களை உறுத்தினால் அந்தக் கோட்டினைக் கை வைக்காமலே அதை சின்னதாக்கி விட முடியாதா?

மிகவும் எளிமையாய் அதை செய்து விட முடியும் உங்களால்.

அதை விட பெரியதாய் கோடொன்றினைப் போடுங்கள். கலைஞரின் கோடு சின்னதாய்ப் போகும்.

இல்லை என்றால்,

போன வாரம் எந்த அமைப்பையும் சாராத விஷ்ணுபிரம் சரவணன், கவின் மலர், நறுமுகை தேவி போன்ற இளைய பிள்ளைகள் ஒரு எண்பது பேர் சென்னையில் ஒன்று திரண்டு தோழர் இன்குலாப் அவர்களே வியந்து போற்றுமளவுக்கு உரத்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இதை அருள் கூர்ந்து உதாசினம் செய்து விட வேண்டாம் என்று அன்போடு வேண்டுகிறேன்.

அஸ்மா மக்பூல் என்ற இளைய பெண்ணொருத்தி முக நூலில் இரண்டு வரி எழுதிப் போட்டதுதான் எகிப்தையே புரட்டிப் போட்டது என்பதை இந்தத் தருணத்தில் தங்களுக்கு நினைவு படுத்துவதை எனது கடமையாகவே கருதுகிறேன்.



Friday, November 11, 2011

குற்றம் குற்றமே

” மதச் சார்பற்ற தன்மையுடைய விஞ்ஞானத்தின் பெயரால் நல்லிணக்கத்திற்கெதிரான இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப் படுகிறது என அறிவிக்கிறோம்”

இது ஏதோ ஒரு மத வெறியைத் தூண்டக் கூடிய மத வெறியர் ஒருவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டதற்கான அறிவிப்பு எனில் கவனம் குவிக்காமல் விட்டு விடலாம்.

உலகத்தில் வாழும் மக்களில் பெரும் திரளான ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராகத் திகழும் போப்பாண்டவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது என்பதும், அதுவும் அவரது ஆளுகைக்கு உட்பட்ட பல்காலைக் கழகமே மேற்சொன்ன பிரகடனத்தோடு அதை செய்துள்ளது என்பதை அறிந்ததும் இயல்பாகவே ஏன்? என்ற ஆவல் பிடித்துக் கொள்ள உள்ளுக்குள் நுழைந்தோம்.


“ எல்லா சாலைகளும் ரோமை நோக்கி “ என்று சொல்வார்கள். உலகில் பெரும்பகுதி ரோமன் கத்தோலிக்கர்கள் என்ற பெரும்பான்மையின் செருக்கு மிகுந்த வெளிப்பாடாக இதைக் கொள்பவர்களும் உண்டு. அதில் நியாயமும் உண்டு. மேன்மைமிக்க வெளிப்பாடாக இதைக் கொண்டவர்களும் உண்டு. போப்பாண்டவரின் ஆளுமையும் செல்வாக்கும் உலகை கோளோச்சும் அந்த நிலை இன்னும் அப்படியேத்தான் உள்ளது. பிறகெப்படி இது சாத்தியப் பட்டது? ஏன் தேவைபட்டது?

லா ஸாட்னீஸா என்று ஒரு பல்கலைக் கழகம் ரோமில் உள்ளது.17.01.2008 அன்று போப்பாண்டவர் அவர்களின் அருளாசியுடன் அது தனது அந்த ஆண்டிற்கான பணியினைத் துவங்கும் என்று முன்னர் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த அறிவிப்புதான் பின்னர் திரும்பப் பெறப் பட்டது.

சரி, அப்படி என்ன அந்தப் போப்பாண்டவர் தவறு செய்து விட்டார்?

1633- ஆம் ஆண்டு கலிலியோ மீது ஒரு விசாரனை நடத்தப் பட்டது. திருச்சபையின் முன் கலிலேயோ நிறுத்தப் பட்டார்.

எதற்கந்த விசாரனை?

1633-ல் கலிலேயோ சூரியனை மையமாக வைத்து பூமி சுற்றுகிறது என்று அறிவித்தார். கத்தோலிக்கத் திருச்சபையோ பூமி நிலையானது, அசையும் தன்மை அற்றது என்று நம்பியது. சூரியன்தான் பூமியை சுற்றுகிறது என்றும் நம்பியது. நம்பவும் சொன்னது. நம்ப மறுத்தவர்களைத் தண்டிக்கவும் செய்தது.

இந்த நிலையில் கலிலேயோ சற்று உரத்து குரலெடுத்து ”பூமி நிலையானது அல்ல. சூரியனைச் சுற்றி இயங்குகிறது” என்று சொன்னார்.இவருக்கு முன்னரே கோபர் நிக்கஸ் இதைக் கண்டுபிடித்திருந்தார். காயம் படாமல், கழுமரம் ஏறாமல், அவஸ்தைக் கால ஜெபத்தோடு செத்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை அவருக்கிருந்ததால் உயிருக்கு பயந்தவராக அதை வெளியே சொல்லாமலே செத்துப் போனார்.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாத கலிலேயோ இதை சொன்னார். நன்கு சத்தம் போட்டே சொன்னார். இது திருச்சபையின் நம்பிக்கையை, விசுவாசத்தைக் கேள்வி கேட்டது. இந்தக் கேள்வி திருச்சபையின்பால் நம்பிக்கை கொண்டுள்ள கத்தோலிக்கர்களிந்தேவ விசுவாசத்தை, கத்தோலிக்க கட்டமைப்பை உடைத்துவிடுமோ என்று திருச்சபை அச்சப் பட்டது. திருச்சபையே விசுவாசத்தின் மேல் கட்டப்பட்டதுதான். “ நம்பி விசுவாசிப்பவனை விட நம்பாமல் விசுவாசிப்பவனே பாக்கியவான்” என்றும் சொல்லப் பட்டது. ஆகவே இதனை அப்படியே விடுவது என்பது திருச்சபையை முடிவுக்கு கொண்டு வருகிற ஒரு தொடர் செயலுக்குக் கால் கோலும் என்று திருச்சபை கருதியது. எனவே அன்றைய போப்பாண்டவர் தலைமையில் விசாரனை துவங்கியது. விசாரனை என்பதைவிட கட்டப்பஞ்சாயத்து என்பதே பொருந்தும். அதே போல போ[ப்பாண்டவரைக் கூட நாட்டாமை என்றும் அந்த விசயத்தில் கொள்ளலாம்.

அந்தக் கட்டப் பஞ்சாயத்து கலிலேயோ தனது கருத்துக்களைத் திரும்பப் பெறவேண்டும் என்று தீர்ப்பு சொன்னது. வேடிக்கைப் பார்க்கத் திரண்ட ஜனத்திரளின் முன் கலிலேயோ தனது கருத்துக்களைத் திரும்பப் பெற்றார். இதற்காக சிறை பட்டார். இறுதியாய் பைத்தியம் பிடித்து செத்தும் போனார்.

ஏறத்தாழ 360 ஆண்டுகளுக்குப் பிறகு, 1990 வாக்கில் எந்த மேல் முறையீடுமின்றியே இந்த விசயம் மீண்டும் விசாரனைக்கு வந்தது. இப்போது திருச்சபை தனது முடிவை மாற்ரிக் கொண்டது. பூமிதான் சூரியனச் சுற்றுகிறது என்ற கலிலேயோவின் கருத்தை ஏற்றது. சுருங்கச் சொன்னால் மதத்தை விஞ்ஞானம் வென்றது.

அப்போது அந்தக் குழுவில் இருந்த பெனடிக் 16- ஆம் கார்டினல் ரட்சசிங்கர் மட்டும் கலிலேயோ கருத்து ஏற்கத்தக்கதல்ல. 1633-ல் திருச்சபை எடுத்த முடிவே சரியானது. எனவே கலிலேயோவின் கருத்தை திருச்சபை நிராகரிக்க வேண்டும் என்று கூறினார். மட்டுமல்ல அவர் தனது கருத்தில் விடாப் பிடியாகவும் இருந்தார். நல்ல வேளையாக அன்றைய பெரும்பான்மை இவரது கருத்திற்கு எதிராகப் போகவே திருச்சபை த்னது 360 வயது பழைய கருத்தை மாற்றிக் கொண்டு கலிலேயோவை குற்றத்திலிருந்து விடுவித்தது.

விஞான யுகத்தில் விஞானத்தின் சகல கனிகளையும் ருசித்துக் கொண்டே தனி ஒரு மனிதனாய் அந்தக் கூட்டத்தில் கலிலேயோவை ஏற்கக் கூடாது என்று சொன்ன பெனடிக் 16-ஆம் கார்டினல் ரட்சசிங்கர்தான் அன்றைய நிகழ்ச்சியை அருளாசி செய்து வைக்கவேண்டிய போப்பாண்டவர். அதைத்தான் அந்தப் பல்கலைகழகத்தின் கல்வியாளர்கள் எதிர்த்தனர்.

அவர்களும் விசுவாசிகளே. ஆனால் அற்ப விசுவாசிகள் அல்ல. விஞானத்தை ஏற்கும் ஆன்மீகவாதிகள்.

இறுதியாக பல்கலைக் கழகம் தவறு செய்தவர் தெய்வமென தாங்கள் போற்றி வழிபடும் போப்பாண்டவரே ஆயினும் அது தவறுதான் என்று முடிவெடுத்தது.போப்பாண்டவரின் நிகழ்ச்சியை ரத்து செய்து , நாம் ஆரம்பத்தில் பார்த்த அறிவிப்பை செய்தது.

முதலில் மதப் பழமை வாதிக்கும், மதப் பழமைவாதத்திற்கும் எதிராகத் திரண்டு கொதிதெழுந்த அந்த 67 கல்வியாளர்களையும்சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறோம்.

இந்த நிகழ்வை இந்தியாவில் உள்ள கல்வி நிலையங்கள் அருள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்றும், மத வாதிகளின் நெருக்கடியை, பழமைக் கூத்தை வெறிகொண்டு எதிர்க்க வேண்டுமென்றும் ஆசைப் படுகிறோம்.அன்றைக்கே ஒருவன் தமிழில் சொன்னான்.

“ நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

எனது முதல் நூலான “அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற நூலில் இருந்து

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...