Wednesday, April 28, 2010

எம்.ஏ. சுசீலா பார்வையில் அந்தக் கேள்விக்கு வயது 98

தோழர் என விளித்தபடி அன்புமடல் எழுதும்இரா எட்வினின் ‘’அந்தக் கேள்விக்கு வயது 98 ‘’ என்ற கட்டுரை நூல் ..


‘’சமுதாயத்தின் மீதான இடது சாரிப் பார்வை,உரிமைக்கான குரல்,தாய்மொழி மீதான அக்கறை,பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதி’’ஆகிய கூறுகளே இந்தத் தோழர் எழுத்தின் சாரம் எனத் தமது அணிந்துரையில் கோவி.லெனின் குறிப்பிட்டிருப்பதில் அணுவளவும் பிழையில்லை என்பதை இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையும் மெய்ப்பிப்பதை வாசித்துத்தான் உணர வேண்டும் என்றாலும்..பானைச் சோற்றுக்குப் பதச்சோறாய்ச் சில....


இந்த நூலின் தலைப்பு சற்று ஆச்சரியப்படுத்துவதாய் இருக்கவே முதலில் அந்தக் கட்டுரைக்குள் நுழைந்து பார்த்தால் .... தெரிந்த செய்தியாக இருந்தாலும் கட்டுரை முடிவில் எட்வின் வைத்திருக்கும் வித்தியாசமான முத்தாய்ப்பு மானமுள்ள தமிழர்களைத் தலைகுனியச் செய்யும் சாட்டையடியாக வந்து விழுகிறது.பின்னாளில் பாரதியின் சீடராகி அவரது வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக வடித்துத் தந்த வ.ரா.என்னும் வ.ராமசாமி அய்யங்கார் முதன் முதலாகப் பாரதியைக் காணப் புதுச்சேரி வருகிறார்.ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என எண்ணி வ.ரா. ஆங்கிலத்தில் பேச பாரதி செவிட்டில் அறைவது போல


‘’இன்னும் எத்தனை நாளைக்கு ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்’’என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார்


அதற்கு எட்வினின் பின்னுரை இதோ....இது நடந்தது..1910ஆம் ஆண்டு.பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98.இன்னும் இரண்டாண்டுகளில் நூற்றாண்டு.(எட்வின் நூலெழுதப்பட்டு 2 ஆண்டு கடந்து விட்டதால் இப்போது உண்மையாகவே அந்தக் கேள்வி கேட்கப்பட்டு 100 ஆண்டு முடிந்து விட்டது.)


எட்வின் கேட்கிறார்...‘இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்

வண்ண மயமான செம்மொழி மாநாடுகளின் கோலாகல ஆர்ப்பாட்டங்களில் திளைத்தபடி....தமிழை ஆங்கில உச்சரிப்பில் பேசும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களோடு (இரு பாலாரும்தான்)கூச்சமின்றித் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருக்கும் நமக்குப் போயும் போயும் இந்தக் கேள்விக்கு பதில் தேடவா நேரம் இருக்கப் போகிறது..?


பாவம்..... அப்பாவி எட்வின்கள் ஒருபக்கம் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்

தமிழ்ப் பாடகர் ஒருவர் பாடிய தெலுங்குக் கீர்த்தனைகளை ஒரு முறை கேட்ட சாயிபாபா, தெலுங்கு உச்சரிப்பில் கவனம் செலுத்துமாறு அவரிடம் அறிவுறுத்தியதை எடுத்துக் காட்டும் எட்வின் அதைத் தனக்கே உரிய கோணத்தில் இப்படிப் பார்க்கிறார்.


‘’கடவுளின் அவதாரமாகவே பல கோடி மக்கள் அவரைக் கொண்டாடினாலும்,தமது தாய்மொழி தெலுங்கு என்பதிலும்,தனது தாய்மொழியை வேற்று மொழிக்காரரும் சரியாய் உச்சரிக்க வேண்டும் என்பதிலும் அவருக்குள்ள அக்கறையைப் போற்றுகிறோம்,.இன்னுஞ் சொல்லப்போனால் அநேக விஷயங்களில் அவரோடு முரண்படுகிற நாம் அவரது மொழிப்பற்றை சிரந்தாழ்த்தி மகிழ்ச்சியோடு வணங்குகிறோம்....நாம் தமிழர்.நமது தாய்மொழி தமிழ் தமிழ் .இதை நாம் எப்போது உணரப்போகிறோம்?’


உணர்ச்சி வேகத்தில் மொழி உணர்வுக்குக் கொடி பிடித்து ஆவேசத்தைத் தூண்டிவிடும் மலிவான நோக்கம் எதுவும் நூலாசிரியரிடம் இல்லை.அடிப்படையே ஆடிப்போய்விடுமோ என்ற ஆதங்கமே அவரை அங்கலாய்க்க வைக்கிறதென்பதை அவரே பதிவு செய்கிறார்.


‘’எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதைப் பிறர் மேல் விட மாட்டேன்’’என்பார் ஞானக் கூத்தன்.ஆமாம். பிறர் மீது விட வேண்டாம்ஆனால் நாமாவது சுவாசிக்க வேண்டாமா

மொழி சார்ந்து எழுப்பும் இந்தக் கேள்விகளோடு நம் மனச் சாட்சியைத் தொட்டு உலுக்கி ...சமூகம்,அரசியல்,மதம் எனப் பல களங்களிலும் பல வினாக்களை முன் வைக்கின்றன இவரது கட்டுரைகள்.


சூரியனை மையமாக வைத்துப் பூமி சுற்றுகிறது என்ற கருத்தை 1633 இல் வெளியிட்டுத் திருச்சபையின் கருத்துக்கு எதிராகக் கருத்துச் சொன்ன கலீலியோவின் மீது போடப்பட்ட அதே வழக்கு 360 ஆண்டுகளுக்குப் பின்,1990 இல் மேல்முறையீட்டுக்கு வந்தபோது திருச்சபை தன் முடிவை மாற்றிக்கொண்டு அவரது கருத்தை ஏற்றது என்பதால் ‘மதத்தை விஞ்ஞானம் வென்றது’என ஆத்மார்த்தமாக மகிழும் எட்வின் அத்துடன் வேறொரு சுவாரசியமான தகவலையும் சேர்த்துச் சொல்கிறார்.


‘90 இல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது , தற்போது போப்பாண்டவராக உள்ள பெனடிக் மட்டும் கலீலியோவின் கருத்தத் திருச்சபை நிராகரிக்க வேண்டுமென்று விடாப்பிடியாகச் சொல்லியிருக்கிறார் என்பதும்...அந்தக் காரணத்தினாலேயே - இப்பொழுது அவர் போப்பாண்டவராகவே இருக்கும் நிலையிலும் ரோமிலுள்ள லா ஸாட்னீஸா என்ற பல்கலைக் கழகம் அவர் அருளாசி தரவிருந்த நிகழ்வைத் துணிவோடு ரத்து செய்து விட்டதென்பதும் (17.01.08)எட்வின் தரும் புதிய தகவல்கள்.


‘அவர்களும் விசுவாசிகளே ஆனால் அற்ப விசுவாசிகளல்ல.விஞ்ஞானத்தை ஏற்பவர்கள்’ என்று கூறும்கட்டுரையாளர் ‘குற்றம் குற்றமே’ என்ற இக் கட்டுரையை,‘இந்த நிகழ்வை இந்தியாவிலுள்ள கல்வி நிலையங்கள் அருள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்றும்,மதவாதிகளின் நெருக்கடியைப் பழமைக் கூத்தை’ எதிர்க்க வேண்டும் என்றும் முடித்திருப்பது இந்தியநடப்பியலின் கவலை தரும் போக்கில் அவருக்குள்ள மெய்யான அக்கறையை ஆத்மசுத்தியோடு பதிவு செய்கிறது


மீண்டும் அதே பூமி பற்றிய ஆராய்ச்சி. ஆனால் இம்முறை தர்க்கத்தில் ஈடுபடுபவர்கள் சின்னக் குழந்தைகள்.


‘’பூமி தட்டைன்னு சொன்ன ஆளுடீ உங்க சாமி ! பூமி உருண்டைன்னு தெரியாத சாமி எப்படிடீ பூமியப் படச்சிருப்பான்’’என்று வாதத்தைத் தொடங்கி வைக்கிறான் கட்டுரையாளரின் மகன்.‘’...குண்டன் தப்பு தப்பாப் பேசறான் இப்ப்டிப் பேசறதனாலேதான் எப்பவும் செகண்ட் ரேங்கிலேயே இருக்கே ....சாமி தப்பா சொல்வாரா ‘’என்றெல்லாம் தங்கை ஆதங்கப்பட்டுத் தவித்தாலும்


‘’பூமி உருண்டைன்னு உனக்கெப்படித் தெரியும்’’ என்ற தன் அடுத்த கேள்வியை அண்ணனிடம் வைக்கத் தவறவில்லை அவள்.


‘’சயின்ஸ்லே படிச்சேண்டி கத்தரிக்கா’’என்கிறான் பதிலுக்கு அவன்.


அதற்கு அந்தத் தங்கை சொல்லும் பதிலிலேதான் அப்பழுக்கற்ற குழந்தை மனதைப் பிட்டு வைக்கிறார் கட்டுரையாளர்.


‘’ஏம்பா சாமி காலத்திலே சயின்ஸ் இல்லதானேப்பா. சாமிக்கு சயின்ஸ் தெரியாது.அதனாலேதான் அப்படிச் சொல்லியிருப்பார். சாமி சயின்ஸ் படிச்சிருந்தா உன்னைவிட பர்ஸ்ட் ராங்கா சொல்லியிருப்பார்’’

என்று அந்தப் பிஞ்சுப் பெண் பேசி முடிப்பதைச் சொல்லி


‘குழந்தை மாதிரி தெளிவாய்ப் புரிந்து கொள்ள தெளிவாய்ப்பேச நமக்கின்னும் பயிற்சி வேண்டும்’என்று கட்டுரையை நிறைவு செய்கிறார்.பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள்’சிறுகதையை நினைவூட்டும் கட்டுரை ஆக்கம் இது.


பிரபலமானவர்களின் எழுத்துக்களை மட்டுமே மேய்ந்து விட்டு நகர்ந்து செல்லும் நாம் தெரிந்துகொள்வதற்கான நல்ல பல தகவல்களும்,முற்போக்குச் சிந்தனைகளும்,மானுட நேயமும் ...பார்வைக்கு அதிகமாக வந்திராத நூல்களிலும் கூடக் குவிந்துகிடக்கக் கூடும் என்பதற்கான கண் திறப்பு எட்வினின் இந்நூல்.(முகம் தெரியாத எனக்கு இந்நூலை அனுப்பி,இதைப் படிக்கும் அனுபவத்தைச் சாத்தியமாக்கிய அவருக்கு மீண்டும் நன்றிகள்.)இனியேனும்...புத்தகக் கடை வரிசைகளை நூலக அடுக்குகளைக் கடந்து செல்கிறபோது நம் கவனம்..அதன் வெளிச்சம் இவ்வாறான நூல்கள் மீதும் சற்று விழட்டும்.


‘ஏதேனும் ஒன்று என் உசிரைப் பிசையுமானால் அதைப் பற்றி எழுத முற்படுகிறேன்’ என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் தோழர் எட்வின்.தனது எழுத்தின் வல்லமை படிப்பவர் இதயத்தையும் பிசையும் வலிமை வாய்ந்ததாக இருப்பதை இதற்குள் பல எதிர்வினைகள் அவருக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.

மண் பயனுறச் செய்யும் எழுத்து....மனித மாண்புகளைத் தூண்டும் எழுத்து.....மலினமான மோசடிகளைச் சாடும் எழுத்து...அவருக்கு வரமாக வாய்த்திருக்கிறது.பல நூல்களின் தொடர்ந்த உருவாக்கத்துக்கான மொழித் திறனும்...சொல்வளமும் அவரிடம் குறைவின்றி நிறைந்து கிடக்கிறது.அவற்றை உள்ளே கனல் பரப்பி எழுத்தாக்கமாய் வெளிக்கொணருவதற்கான எழுச்சியும் ,கிளர்ச்சியும்,ஏற்ற மனநிலையும் பொருந்த வாய்க்க வேண்டும் என்பதே நம் பேரவா.


நூல் விவரம்; இரா.எட்வின்,

‘அந்தக் கேள்விக்கு வயது 98’

சாளரம்-வெளியீடு,

2/1758,என்பீல்டு அவென்யூ,

மடிப்பாக்கம்,

சென்னை- 600 091










Tuesday, April 20, 2010

எலிகளை அழித்த ஊரை முன் வைத்து



குழந்தைகளுக்கு சொல்லித் தரப்படும் கதைகளுக்கு எப்போதுமே "அறம்" சார்ந்த நோக்கமுண்டு. கேட்கும் குழந்தைகள் வருங்காலத்தில் அறத்தோடும் புத்திக் கூர்மையோடும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கம் அவைகளுக்குண்டு. தங்களது புத்தி சாதுர்யம், திறமை உள்ளிட்ட அணைத்தையும் "அறம்" தழைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற உயரிய பக்குவத்தை குழந்தைகளுள் விதைத்தலே அவைகளின் நோக்கம்.

இது எல்லா மண்ணிற்கும், எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். நம்பிக்கை, புத்திக்கூர்மை, தைரியம், தாய்மண் மீது தாய்மொழி மீது பற்று, சமூக அக்கறை, எல்லாம் கடந்து அறம் சார்ந்த ஒழுக்கம் என்பவையே குழந்தை இலக்கியத்தின் குறிப்பாக குழந்தைகளுக்கான கதைகளின் இலக்கு.

நம் மண்ணில் அறத்தின் மீது தரப்படும் அழுத்தம் ரொம்பவும் அதிகம். "அறம் செய விரும்பு" என்று அடித்துச் சொல்லித் தரும் சமூகம் தமிழ்ச் சமூகம்.

என்றால், தொன்ம, பழமிலக்கியங்களை மறு கட்டமைப்பது தேவையா? பலன் தருமா?

பார்த்துதான் விடுவோமே.

ஒரு பாட்டி கதை.

பாப்பாக்களுக்கும் தம்பிகளுக்கும் பள்ளிகளில் சொல்லித் தரப்படுவது. குழந்தைகளாய் இருந்த போது நமக்கும் நம் தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும்கூட சொல்லித் தரப்பட்டதுதான்.

நல்ல வெயில். பறந்து கொண்டிருந்த காகத்திற்கு தகிக்கிறது. பறந்து கொண்டே கீழே எங்கும் தண்னீர் கிடைக்குமா என்று தேடுகிறது. ஒரு ஜாடி அதன் கண்களில் படவே அது கீழே இறங்குகிறது. தனது கூரிய அலகினை ஜாடிக்குள் நுழைத்து நீர் அருந்த முயற்சி செய்கிறது. அதன் அலகிற்கு நீர் எட்டவில்லை. சிறிது நேரம் யோசித்த காகம் அருகே கிடந்த சிறு சிறு கற்களை எடுத்து ஜாடியில் போடுகிறது. நீர் கொஞ்சம் உயர்ந்து வரவே காகம் தனது தாகத்தை தீர்த்துக் கொண்டு பறந்து போனது.


காகத்தின் புத்தி சாதுர்யத்தை வியக்கும் வகையில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதன் நோக்கம் வாழ்க்கையில் அது மாதிரியான சூழலை சந்திக்கும்போது அந்தக் காகத்தைப் போல புத்திசாலித்தனத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்கிற வேட்கையை குழந்தைகளிடம் விதைப்பதுதான் இந்தக் கதையின் நோக்கம்.

எதிர் பார்க்கப்பட்ட பலனை இது தந்ததா?

அதையும்தான் பார்த்துவிடலாமே.

கொண்டபுரம் ராஜவிஜயன் மார்ச் 2010 "இது பெரிய எழுத்து" வில் சமீபத்தில் தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு காட்சியை விவரித்திருந்தார். அதை நானும்கூடப் பார்தேன் , நீங்களும் பார்த்திருக்கக் கூடும்.

வறட்சி வாட்டும் வனப்பகுதிகளில் ஆங்காங்கே விலங்குகளுக்காக நீர்த்தொட்டிகளைக் கட்டியிருக்கிறது அரசு. அதில் ஒரு தொட்டியில் சில வாரங்களே வயதுடைய இரண்டு யானைக் குட்டிகள் விழுந்து விட்டன. குட்டிகள் மூழ்கிவிடுமளவிற்கு தொட்டியில் தண்ணீர் இல்லை. என்னென்னவோ செய்தும் குட்டிகளால் மேலேற முடியவில்லை. என்ன செய்தும் தாய் யானையாலும் குட்டிகளை மேலே இழுத்து விட முடியவில்லை. ஆற்றாமையில் அது பிளிறிக் கொண்டே தொட்டியை சுற்றி சுற்றி வந்தது.

யானையின் ஆக்ரோஷமான பிளிரல் பக்கத்து கிராம மக்கள் சிலரை அங்கே இழுத்து வந்தது. தனது குட்டிகளை ஏதேனும் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் தாய் யானை அவர்களை தொட்டியின் அருகே வரவிடாமல் விரட்டி அடித்தது.

யோசித்த மக்கள் கற்களை வீசி தொட்டியின் ஒரு பக்க ஆழத்தைக் குறைக்க முடிவெடுத்தனர். ஆரம்பத்தில் தனது குட்டிகளைத் தாக்கத்தான் கற்களை வீசுகிறார்கள் என்று எண்ணி அழிச்சாட்டியம் செய்த தாய் யானைக்கு உண்மை புரிய வெகு நேரமாகவில்லை. உடனே குட்டிகளின் மீது கற்கள் பட்டுவிடாமல் ஒரு மூலையில் அவைகளைத் தள்ளி ஒத்துழைத்தது.


ஒரு வழியாய் குட்டிகள் மேலேறியவுடன் தாயும் பிள்ளைகளும் சந்தோஷமாய் வனத்திற்குள் நுழைந்தன.

தங்களது குழந்தைப் பிராயத்தில் அந்தக் கிராமத்து மக்களுக்கு கிடைக்கப் பெற்ற "காகம்" கதையின் அநிச்ச விளைவாகக்கூட இது இருக்கலாம். கற்களை தொட்டிக்குள் வீசித் தொட்டியின் ஆழத்தைக் குறைப்பதன் மூலம் குட்டி யானைகளைக் காப்பாற்றி விடலாம் என்கிற புத்தி சாதுர்யம் அந்தக் கதையின் விளைவாகவும் வெற்றியாகவும் கூட இருக்கலாம். தாய் யானையின் எதிர்ப்பையும் மீறி அதிலிருந்த ஆபத்துக்களையும் எதிர்கொண்டு குட்டிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பினை ஏற்றதற்கு இந்தக் கதையிடமிருந்து பெற்ற அறம் சார்ந்த விழுமியங்களாகவும் இருக்கலாம்.

குழந்தைகளுக்கு இந்தக் கதையை சொல்லித் தருவதன் நோக்கமிதுதான் என்ற வகையில் இந்தக் கதையின் நோக்கம் நம் கண் முன்னே நிறைவேறி இருப்பதாகக் கொள்ளலாம்.

இது மாதிரி குழந்தைக் கதைகள் நமது அறிவு சார், அறம் சார் பொக்கிஷங்கள். தலைமுறை தலைமுறையாய் மாற்றி மாற்றி கையளிக்கப் பட்டு இன்று நம் கைகளுக்கு வந்துள்ள இந்தப் பாரம்பரிய பொக்கிஷங்களை நாம் மெருகு படுத்தி அடுத்த தலைமுறையின் கைகளில் கைமாற்றித் தரவேண்டிய பொறுப்பினை நாம் சரியாக செய்கிறோமா?
யுகம் யுகமாய் வாய் வழியாய் வளர்க்கப்பட்ட இந்தக் கதைகள் பிறகு ஓலையில் பிறகு தாளில் அச்சில் என்று வளர்ந்து வந்துள்ளன. இன்னும் தாண்டி ஒலித் தகடுகள், ஒலி-ஒளித் தகடுகள் என்று வளர்ந்து விரிந்த நிலைகளில் அவற்றின் பதிவுகள் நம்மை மகிழச் செய்கின்றன.

தாராள மயத்தின் கோர வளர்ச்சியில் விளம்பரத் துறையும் தனது வணிக பயன்பாட்டிற்காக குழந்தைகளின் இலக்கியத்தை இப்போது கையிலெடுத்துள்ளன. அப்படி இவர்களின் கைகளில் சிக்கி சின்னா பின்னப் படுத்தப்பட்டு சிதைந்து சீரழிந்து நிற்கும் குழந்தைகளுக்கான ஒரு கதைப் பாடலை பார்க்கலாம்.

"pied piper" என்ற ஆங்கில கதைப் பாடல். கதையின் வழியாக ஆழமான ஒரு அறத்தினை குழந்தைகளின் அடி மனசில் பதியச் செய்யும் பாடல்.


அந்த ஊர் எலிகளால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஐம்பதுக்கும் குறையாத எண்ணிக்கையில் எலிகள். ஊர் மக்கள் கந்துக் காரனை விடவும் இந்த எலிகளைக் கண்டுதான் அதிகம் பயந்தனர். அவ்வளவு தொல்லை எலிகளல் அவர்களுக்கு. " நூறு புலிகளை ஜமாளிச்சுடலாம், ஆனா ஒரு எலிச் சனியனை ஜமாலிக்கிறதுக்குள்ள உசிறு போய் உசிறு வருது" என்று பேசிக் கொள்ளுமளவிற்கு அவர்கள் எலிகளால் பாதிக்கப் பட்டிருந்தார்கள். நிலை குலைந்த அவர்கள் ஊர்த் தலைவரிடம் ஒன்று திரண்டு சென்று இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமாய் வேண்டினர். அவர் வீட்டிலும் சற்றேரக் குறைய அறுபத்தி இரண்டு எலிகள் என்கிற வகையில் இதுபற்றி யாரும் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர் இல்லைதான்.

ஒவ்வொரு நாளும் அவரது அலுவலகம் ஊர் மக்களால் முற்றுகையிடப் பட்டது. மக்களுக்கு எலிகள் மட்டுமே பிரச்சினை ஊர்த் தலைவருக்கோ வீட்டிலே எலிகளாலும் அலுவலகத்தில் பொது மக்களாலும் பிரச்சினை.

அழிபட மறுத்து நாளும் நாளும் செழித்து வளரும் இந்திய ஜாதிகளைப் போல என்ன செய்தும் நாளும் வளர்ந்து வந்த எலிகளை ஒழிப்பதற்கு ஒரு இளைஞன் முன் வந்தான். அதற்கு ஊதியமாக ஒரு பெருந்தொகையினை கேட்டான். தங்கள் ஊர் எலிகளை ஒழிப்பதற்கு காலமும் உழைப்பும் அதிகம் தேவைப் படும் என்று கருதிய ஊர்த் தலைவர் அந்த இளைஞன் கேட்ட பெருந்தொகைக்கு சம்மதித்தார்.

ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த இளைஞன் இசைக் குழலினை இசைத்தவாறு நடக்கத் தொடங்கினான். என்ன ஆச்சர்யம்! அந்த ஊரில், பிறந்து இரண்டு நொடிகள் மட்டுமே ஆன எலிக்குட்டிகள் உட்பட அனைத்து எலிகளும் அவன் பின்னால் அவன் இசைக்கு கட்டுப் பட்டு நடந்தன. இசைத்துக் கொண்டே அவன் ஒரு நீர் நிலைக்குள் அவன் இறங்க எலிகளும் நீர் நிலைக்குள் இறங்கி அழிந்து போயின.

ஒரு முக்கால் மணி நேரத்திற்குள் எலிகளே இல்லாத ஊராய் மாறிப் போனது அந்த ஊர்.

ஊதியம் பெருவதற்காக ஊர்த் தலைவரிடம் வந்தான்.


முக்கால் மணியில் முடிந்து போன ஒரு சொற்ப வேலையாகவே அது ஊர்த் தலைவருக்குப் பட்டது. பேசிய தொகையில் பெரும் பகுதியை குறைத்து ஒரு சன்னமான தொகையினை அவனிடம் நீட்டினார்.

காரணம் கேட்டது அவனது பார்வை.

"இதுவே அதிகம்" அவரது பெருந்தன்மையை எடுத்து வைத்தது அவரது பார்வை.

"பரவாயில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" புன்னகை கசிய இளைஞன் வெளியேறினான்.

இசைத்தபடியே மீண்டும் நடந்தான். இந்த முறை நடை பழகும் குழந்தைகளும் அவன் பின்னே நடை வண்டிகளோடு கிளம்பின.

விபரீதம் உணர்ந்த ஊர்த் தலைவர் பேசிய தொகையை பணிந்து கொடுத்து ஊர்க் குழந்தைகளை மீட்டார்.

இந்த கதையை எதனோடெல்லாம் பொறுத்தி புதிதாய் அறம் சொல்லலாம்.

சூதாய் உழைப்பை சுரண்டி ஏமாற்றினால் இது போல கேடு விளையலாம் என்று சொல்லித் தரலாம். அல்லது ஒரு கலைஞனின் மேன்மையை விளக்க இந்தக் கதையை சொல்லலாம்.

ஆனால் தற்போது ஊடகங்களில் இந்தக் கதையை ஒவ்வொரு நாளும் பல தடவை ஒரு விளம்பரத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.

இதிலும் எலிகள் அழிக்கப் படுகின்றன. பேசிய ஊதியம் வழங்கப் படாததால் புன்னகையோடு இளைஞன் வெளியே வருகிறான். இது வரை மாற்றமில்லை. இப்போது இசைக் கருவி அல்ல அவனது ஆயுதம். ஒரு வாசனை திரவத்தை (spray) தன் மேலே இட்டுக் கொள்கிறான். வீதியில் நடக்கிறான். அந்த வாசனை திரவத்தின் வாசனையில் கட்டுண்டு ஊரில் உள்ள அனைத்து பெண்களும் அவன் பின்னே போகிறார்கள்.

நமது கேள்வி இதுதான்.

ஏதோ ஒரு மனிதனிடம் இருக்கும் மேன்மையால் , திறமையால், புகழால், அல்லது அழகால் ஒருவரோ அல்லது சிலரோ ஈர்க்கப் படுவதும் அதில் சிலர் எல்லை தாண்டுவதும் இயல்புதான். இதே காரணங்களுக்காக ஒரு பெண்ணிடம் சில ஆண்கள் ஈர்க்கப் படுவதும் அதில் பலர் எல்லை தாண்டுவதும் வாடிக்கைதான்.

யுவராஜ் , திரிஷா போன்றவர்கள் மொய்க்கப் படுவது இந்த வகையில்தான்

என்ன சொல்கிறது இந்த விளம்பரம்?

அக்குளில் அடிக்கப் பட்ட திரவத்தின் வாசனையே போதும் பெண்களை சோரப் படுத்த என்பதுதானே?

இது சரிதானா?

குஷ்பு மற்றும் ஜெயராம் கருத்துக்கள் பெண்களை இழிவு செய்ததாய் கொதித்துக் குமுறிய நண்பர்களுக்கு இந்த விளம்பரத்தை பார்க்க சிபாரிசு செய்கிறேன்.

வேறென்ன செய்ய?

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...